Home
Links
Contact
About us
Impressum
Site Map?


Afrikaans
عربي
বাংলা
Dan (Mande)
Bahasa Indones.
Cebuano
Deutsch
English-1
English-2
Español
Français
Hausa/هَوُسَا
עברית
हिन्दी
Igbo
ქართული
Kirundi
Kiswahili
മലയാളം
O‘zbek
Peul
Português
Русский
Soomaaliga
தமிழ்
తెలుగు
Türkçe
Twi
Українська
اردو
Yorùbá
中文



Home (Old)
Content (Old)


Indonesian (Old)
English (Old)
German (Old)
Russian (Old)\\

Home -- Tamil -- 09. Comparisons -- 4.04 Second Commandment: Do Not Make Idols
This page in: -- Afrikaans -- Arabic? -- Armenian? -- Azeri? -- Bulgarian? -- Cebuano? -- Chinese -- English -- Farsi? -- French -- German -- Gujarati? -- Hebrew -- Indonesian -- Norwegian? -- Polish? -- Russian -- Serbian? -- Spanish? -- TAMIL -- Turkish? -- Uzbek -- Yiddish? -- Yoruba

Previous part -- Next part

09. இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் – ஒப்பாய்வு
Comparisosns 4 - பத்து கட்டளைகள்

4.04 - இரண்டாவது கட்டளை: சிலைகளை உண்டாக்க வேண்டாம்



யாத்திராகமம் 20:4-6
4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; 5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன. 6 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
(யாத்திராகமம் 20:4-6)

இரண்டாவது கட்டளை முதலாவது கட்டளையின் தொடர்ச்சியாக அதை விரிவுபடுத்துகிறது. இதனால்தான் சில கடுமையான கோட்பாட்டு அமைப்புகளில் இது முதலாவது கட்டளையின் ஒருபகுதியாகவே கருதப்படுகிறது. ஆயினும் சில விளக்கவுரையாளர்களுக்கு இந்த இரண்டாவது கட்டளை கடினமான ஒன்றாக இருக்கிறது. ஏனெனில் அது பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.


4.04.1 - கிறிஸ்தவத்திலுள்ள உருவங்களுக்கு எதிரானது.

உன்னதமானவருடைய கட்டளைகளை கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் மீறுகிறார்கள் என்று யூதர்களும் முஸ்லீம்களும் குற்றஞ்சாட்டுகிறார்கள். “நீங்கள்தான் இறைவனுடைய முதன்மையான கட்டளையை மீறுகிறீர்கள். நீங்கள் இறைவனைக் குறிக்கும் பலவிதமான உருவங்களையும் உருவாக்குகிறீர்கள். உங்களுடைய குறைவுள்ள கற்பனைகளினால் உருவாக்கப்பட்ட அந்த உருவங்களை மக்கள் வணங்கும்படி அவர்களுக்குக் கொடுக்கிறீர்கள்” என்று அவர்கள் முறையிடுகிறார்கள். கிறிஸ்தவ சபைப் பிரிவுகள் நடுவிலும் இந்தக் கட்டளையின் பொருள் என்ன என்பதைக் குறித்து மாபெரும் சர்ச்சை காணப்படுகிறது. சில திருச்சபைகளின் அங்கத்தவர்கள் பிரிந்துபோய் தங்கள் சிலைகளையும் பரிசுத்த பண்டங்களாகக் கருதப்பட்டவைகளையும் உடைத்திருக்கிறார்கள். இறைவனை அவருடைய மகிமையில் நாம் படமாகவோ சிலையாகவோ உருவாக்க முடியாது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இறைவனை சித்திரமாகத் தீட்டும் அனைத்து முயற்சிகளும் இறைவனைப் பரியாசம் செய்வதாகவும் அவருடைய தெய்வீக மகிமையை அவமானப்படுத்துவதாகவுமே இருக்கும். பரிசுத்தவான்களுடைய படங்களும் தேவதூதர்களுடைய படங்களும் பெரும்பாலும் வீணானவைகளாகவே இருக்கின்றன. நம்முடைய கற்பனைகளில் நாம் சிந்திப்பதைக் காட்டிலும் இறைவன் சர்வ வல்லமையிலும் பரிசுத்தத்திலும் மிகவும் மேலானவர். மனிதர்கள் வரையக்கூடிய எந்தச் சித்திரத்திலிருந்தும் அவர் முற்றிலும் வேறுபட்டவர். மைக்கேல் ஏஞ்சலோ வரைந்த படம்கூட இறைவனைச் சித்தரிக்க முடியாது!

வேதாகமத்தில் இறைவன் தம்மை இரண்டு வழிகளில் மனிதர்களுக்கு வெளிப்படுத்துகிறார். முதலாவது அவர் தம்முடைய வார்த்தையைக் கேட்கிறவர்களுக்கு அதன்மூலம் தம்மை வெளிப்படுத்துகிறார். இரண்டாவது தீர்க்கதரிசிகளுக்கு தம்முடைய தரிசனத்தின் மூலம் தம்மை வெளிப்படுத்துகிறார். பழைய ஏற்பாட்டில் இறைவன் தம்மை பெரும்பாலும் தம்முடைய வார்த்தையின் மூலமாகவே வெளிப்படுத்தினார். சில வேளைகளில் தரிசனங்கள் மூலமாகத் தம்மை வெளிப்படுத்தினார். இறைமகன் தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு முன்பாக தம்முடைய மகிமையுள்ள உருவத்திற்கு மறுரூபமானபோது, அவருடைய வெளிப்படுத்தப்பட்ட தெய்வீக பரிசுத்தம் அவர்களுடைய அசுத்தத்தை நியாயந்தீர்த்த காரணத்தினால், அவர்கள் செத்தவர்களைப் போல தரையிலே விழுந்தார்கள். தரிசனங்களைப் பார்த்த யாராலும் தாங்கள் பார்த்த காட்சி என்ன என்பதை சரியாக விளக்க முடியவில்லை. அவர்கள் கற்பனையினாலேயே அந்தக் காட்சிகளை விவரித்தார்கள்.


4.04.2 - சிலைகளையும் உருவங்களையும் ஆராதிப்பதைத் தடுத்தல்

இரண்டாவது கட்டளையை நாம் சரியாக ஆய்வு செய்தால், இறைவனைக் குறித்த படங்களை உருவாக்குவதை அந்தக் கட்டளை தடைசெய்யவில்லை என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். ஆனால், அந்தக் கட்டளை எல்லாவிதமான சிலை வழிபாடுகளையும் தடைசெய்கிறது. மற்ற தெய்வங்களை, அல்லது சிலைகளை, அல்லது செதுக்கிய உருவங்களை வணங்குபவர்கள் இறைவனுடைய கோபத்திற்குக் கீழாக இருக்கிறார்கள்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மலை உச்சிகளில் செதுக்கப்பட்ட பெரிய சிலைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவைகள் கற்களினால் செய்யப்பட்டவைகளாகவும் மக்களுடைய வணக்கத்திற்கு உரியவைகளாகவும் இருந்தன. மரத்தினாலும், கற்களினாலும், வெள்ளியினாலும், பொன்னினாலும் செய்யப்பட்ட உருவங்கள் வணக்கத்திற்குரியவைகளாக வீடுகளிலும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் உண்மையான ஒரே இறைவனை யார் நம்ப மறுக்கிறார்களோ, அவர்கள் அவரை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிடுகிறார்கள். அசுத்தமான ஆவிகள் வேகமாக அவர்களுடைய வீடுகளுக்குள் நுழைகிறது. இயேசுவின் காலத்தில் வாழ்ந்த கிரேக்கர்கள் தங்களுடைய தெய்வங்களுக்கு முன்பாக பலவித அசுத்தமான பாலியல் பாவங்களில் ஈடுபடும்படி பெருந்திரளாகக் கூடிவந்தார்கள். எகிப்தியர்களும், அசீரியர்களும், பாபிலோனியர்களும் முற்காலத்தில் இதையே செய்தார்கள். இதனால்தான் மோசேயும் தீர்க்கதரிசிகளும் சிலைவழிபாட்டிற்கு எதிராக தீவிரமாகப் போராட வேண்டியிருந்தது. தீர்க்கதரிசிகளால் சபிக்கப்பட்ட இந்த சிலைகளை இன்று நாம் கெய்ரோ, பாக்தாத், பெய்ரூட் ஆகிய நகரங்களில் உள்ள அருங்காட்சி சாலைகளில் காணமுடியும். இன்று சுற்றுலாப் பயணிகள் இவற்றை ஆர்வத்துடன் கண்டுகளிக்கிறார்கள். புராதன எகிப்தியர்கள் மற்றும் கிரேக்கர்களைக் காட்டிலும் ஆர்க்கோபோலிûஸயும் அரசர்களுடைய கல்லறைகளையும் இந்த சுற்றுலாப் பயணிகளுடைய பாதணிகள்தான் அதிகம் தேய்த்திருக்கிறது. மக்கள் காண முடியாதவற்றிற்கு உருவம் கொடுப்பதற்கு முயற்சிக்கிறார்கள், ஆனால் பிரசங்கிக்கப்படும் வார்த்தைகளில் திருப்தி காண பெரும்பாலும் மறுக்கிறார்கள். மனிதன் செவிகொடுப்பதைக் காட்டிலும் கண்களினால் காண்பதையே அதிகம் விரும்புகிறான். காணப்படாததும் தொட முடியாததும் அவனுக்கு அன்னியமாகவே தோன்றுகிறது. இதனால்தான் இரண்டாவது கட்டளைக்கு கீழ்ப்படிவதற்கு இன்று தொலைக்காட்சிப் பெட்டி பலருக்குத் தடையாக இருக்கிறது.


4.04.3 - யூதர்களாலும் முஸ்லீம்களாலும் உருவங்கள் தடைசெய்யப்படுகிறது

இஸ்லாமிய உலகத்தில் உருவங்கள் 1350 வருடங்களுக்கு முன்பாகவே தடைசெய்யப்பட்டிருந்தாலும், தொலைக்காட்சிகளும், வீடியோக்களும், பத்திரிகைகளும் தீவிரமாக மகிழ்ச்சியோடு விரும்பி ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு படங்கள் தடைசெய்யப்பட்ட காரணத்தினால் அவர்கள் அரேபிய ஆபரணக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இதை நீங்கள் சவுதி அரேபியாவினுடைய இஸ்லாமிய கலாச்சாரம் எங்கும் காணமுடியும். சீனாவில் உள்ள மசூதிகளிலும், மொராக்கோ மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள மாளிகைகளிலும் நீங்கள் அவற்றைக் காணலாம். காகிதங்கள், மரங்கள், உலோகங்கள் மற்றும் கற்களில் வடிவியல் கணித முறைப்படி வரையப்பட்ட பூக்கள் மற்றும் தோட்டங்களுடைய சித்திரங்களில் இந்த இரண்டாம் கட்டளை முஸ்லீம்களில் ஏற்படுத்தியிருக்கிற தாக்கத்தை நீங்கள் காணலாம். கிழக்கத்தைய கம்பளங்கள், சிறப்பாக தோட்டங்கள் அல்லது அடையாளமாக வரையப்பட்ட பரதீசு அடங்கியவை, முழு உலகத்தாலும் மிகவும் பாராட்டப்படுகிறது.

சவுதி அரேபியாவில் பாதசாரிகள் பாதையைக் கடக்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள மனித உருவத்திற்கு தலை இருக்காது. இன்றும் தலையை வரைவது சட்டப்படி குற்றமாகும். ஆனால், ஈரான், துருக்கி மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் வாழும் முஸ்லீம்கள் குரானுடைய இந்தத் தடை தங்களைக் கட்டுப்படுத்துவதாகக் கருதவில்லை. அவர்கள் முஹம்மது மற்றும் காபிரியேல் ஆகியோருடைய படங்களைக் கூட வரைகிறார்கள். இது இன்றுவரை அரேபிய முஸ்லீம்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. ஒரு அரேபிய நாடு முஹம்மதுவைப் பற்றிய ஒரு திரைப்படத்தை சமீபத்தில் தயாரித்தபோது, அதில் முஹம்மதுவின் முகத்தை அவர்கள் காண்பிக்கவில்லை. அந்தத் திரைப்படத்தின் அனைத்துக் காட்சிகளையும் முஹம்மது தன்னுடைய சொந்தக் கண்களினால் பார்த்தது போலவும், தன்னுடைய சொந்தக் குரலினால் பேசியதுபோலவும் எடுத்திருக்கிறார்கள். ஆனால் முஹம்மது அந்தத் திரைப்படத்தில் எங்கும் தோன்றவில்லை. இந்தக் காரணத்தினால் கிறிஸ்தவ திரைப்படங்களை முஸ்லீம்களுக்காகத் தயாரிக்கிறவர்கள், இறைவனுடைய தீர்க்கதரிசிகளை, தேவதூதர்களை அல்லது கிறிஸ்துவைக் காண்பிக்கும்போது மிகவும் கவனமாயிருக்க வேண்டும்.

இறைவனைக் குறிக்கும் படங்களை வரையாதபடி யூதர்கள் முற்றிலுமாக நிராகரிப்பதன் மூலமாக இரண்டாம் கட்டளையைக் கைக்கொள்கிறார்கள். ரோமப் பேரரசனாகிய தீத்து கி. பி. 70-ல் எருசலேமைக் கைப்பற்றியபோது தேவாலயத்திற்குள் நுழைந்து, அதி தூய இடத்திற்குள் நுழைந்தபோது அங்கு ஒரு பொற்சிலை அல்லது விலையேறப்பட்ட பொருட்கள் இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தான். அதி தூய இடம் வெறுமையாக இருந்தது, ஏனெனில் இறைவன் சடப்பொருளாக அல்ல, ஆவியாக இருக்கிறார். அவரை நாம் ஒரு கோவிலுக்குள் அல்லது ஒரு சிலைக்குள் அல்லது ஒரு படத்திற்குள் அடைத்து வைக்க முடியாது.


4.04.4 - கிறிஸ்துவை படமாக வரைந்து வைத்திருப்பது வேதாகமத்திற்கு எதிரானதா?

யூதர்களும் முஸ்லீம்களும் இரண்டாம் கற்பனையை விளக்குவதுபோல கிறிஸ்தவர்கள் விளக்குவதில்லை. கிறிஸ்து இவ்வுலகத்தில் மனிதனாகப் பிறந்த இறைவன். அவர் வாழ்ந்தபோது அனைத்துக் கண்களும் அவரைக் கண்டன. “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” (யோவான் 14:9) என்று அவர் சொன்னார். படைப்பின் நோக்கம் கிறிஸ்துவில் நிறைவேறியது. “தேவன் தம்முடைய சாயலாக மனிதனைப் படைத்தார், அவனைத் தம்முடைய சாயலாகவே படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.” (ஆதியாகமம் 1:27) என்று வேதாகமம் அறிவிக்கிறது. ஆதாமும் ஏவாளும் இறைவனுக்குப் பிரதிநிதிகளாக ஏற்படுத்தப்பட்டார்கள். இன்றுவரை மனிதனுடைய சாயல் இறைவனுடைய மகிமையைப் பிரதிபலிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

நாம் அவருடைய படைப்பை அனுபவிக்கவும், அவர் படைத்த பூக்களையும், மிருகங்களையும், மக்களையும் ஓவியமாகத் தீட்டவும் சிலாக்கியம் பெற்றிருக்கிறோம். ஆனால் நாம் அவற்றை ஒருபோதும் தெய்வங்களாக்கி அவற்றை வணங்கக்கூடாது. அனைத்துப் படைப்புகளும் படைப்புகளாகவே எப்போதும் இருக்கின்றன. அவைகள் படைத்தவருடைய நிலையை ஒருபோதும் அடைய முடியாது, ஆகவே அவற்றை நாம் ஒருபோதும் வணங்கக்கூடாது. தீமை இந்த உலகத்திற்குள் நுழைந்தபோது, மனிதன் பாவத்தில் விழுந்துபோன காரணத்தினால், மனிதனிலுள்ள இறைவனுடைய சாயல் மழுங்கிப்போனது. ஆனால் இரண்டாம் ஆதாமாகிய இயேசு இழந்துபோன இறைவனுடைய சாயலை மனிதனுக்குத் திரும்பக் கொடுக்கிறார். “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சொரூபம்” (கொலோசெயர் 1:15) என்று பவுல் அவரைப் பற்றிப் பேசுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இயேசு அனைத்து மனிதர்களுக்காவும் இவ்வுலகில் பிறந்து, மரணமடைந்து, மீண்டும் உயிரோடு எழுந்தார். ஆகவே ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கருத்தின்படி அவரைச் சித்திரமாகத் தீட்டுவதற்கு உரிமையுள்ளவனாக இருக்கிறான். ஆபிரிக்கனும், கிழக்கத்தைய தேசத்தானும், ஐரோப்பியனும், சமீப கிழக்கைச் சேர்ந்தவர்களும் தங்களுடைய தோற்றத்தில் இயேசுவை வரைந்துகொள்கிறார்கள். அனைத்து கலாச்சாரங்களிலும் உள்ள மனித உருவத்தில் அவர் இறைவனுடைய சாயலாக இருக்கிறார். அவருடைய மகிழ்ச்சி, அமைதி, பொறுமை ஆகியவை வெறும் கருத்துக்கள் மட்டுமல்ல, அவை அவர் மனிதர்களுக்கு அவர்களுடைய வாழ்வில் கொடுக்கும் நடைமுறை மெய்மைகள். கிறிஸ்துவில் இறைவன் மனிதருக்கு அருகில் வந்திருக்கிறார். அவர் ஒரு கொடூரமான யுத்த பிரபுவைப் போல தோன்றாமல், நாம் அவரோடு என்றென்றும் வாழும்படி, நமக்காக இறைவனுடைய கோபத்தைச் சுமந்து, நம்முடைய பாவங்களுக்காக மரணத்தைச் சந்திக்க ஆயத்தமாக விருப்பமுள்ளவராக, தாழ்மையான ஆட்டுக் குட்டியைப் போல வந்தார். தியாகம் என்றால் என்ன என்பதை அவர் நமக்குப் போதித்திருக்கிறார். சிலுவை தெய்வீக அன்பின் அடையாளமாக மாறியிருக்கிறது. அவர் மரணமடைந்து உயிரோடு எழுந்தபோது மகிமையான உடலோடு இருந்தார். அது ஆவிக்குரிய உடலாக இருந்தபோதிலும் மற்றவர்களால் பார்க்கக்கூடியதாக இருந்தது (லூக்கா 24:39).


4.04.5 - கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுடைய வாழ்வில் உள்ள கிறிஸ்துவின் சாயல்

இயேசுவினுடைய சீடர்களில் இறைவனுடைய அன்பு, பரிசுத்தம், சந்தோஷம் ஆகியவை வெளிப்படும்படி இயேசுவின் மென்மையான ஆவியானவர் அவர்களுடைய இருதயங்களை அவற்றினால் நிரப்புகிறார். வெறுப்பினாலும் மரணத்தினாலும் நிறைந்திருக்கிற இந்த உலகத்தின் நடுவில் இறைவனுடைய சாயலாக இருக்கும்படி அவர் நம்மை ஏற்படுத்தியிருக்கிறார். நம்முடைய குடும்பத்திலும் அயலாகத்தார் மற்றும் நண்பர்களோடு நமக்கிருக்கும் உறவிலும் நம்முடைய நடத்தையின் மூலமாக பேசும் “கிறிஸ்துவின் கடிதங்களாக” வாழும் பாக்கியத்தை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் கிறிஸ்துவின் குணாதிசயங்களை நம்முடைய வாழ்வில் பிரதிபலிக்கும்படி அவரே தம்முடைய படத்தை நம்மில் வைத்திருக்கிறார். ஆப்பிரிக்காவிலோ, ஆசியாவிலோ, ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ எங்குபோய் இயேசுவின் சீடர்களைப் பார்த்தாலும் கிறிஸ்துவினுடைய சமாதானத்தின் ஒளி அவர்களுடைய முகங்களில் ஒளிர்வதை நாம் கவனிக்க முடியும். ஏழையோ பணக்காரனோ, கற்றவனோ கல்லாதவனோ, வாலிபனோ வயோதிபனோ சிலுவையில் அறையப்பட்டு உயிரோடு எழுந்த கர்த்தராகிய இயேசுவின் ஆவியானவர் யாருடைய இருதயத்தில் வாழ்கிறாரோ அவன் மறு உலகத்தின் பிரகாசத்தை உடையவனாக இருக்கிறான். உலகத்தின் மக்களை ஏழைகள் என்றும் பணக்காரர்கள் என்றும், சோசலிச வாதிகள் என்றும் முதலாளித்துவ வாதிகள் என்றும் பிரித்துப் பார்க்கக்கூடாது. பாவத்தில் வாழ்கிறவர்கள் என்றும் மறுபடியும் பிறந்தவர்கள் என்றும் பிரித்துப் பார்க்க வேண்டும். ஒரு மனிதனுடைய இருதயத்தில் கிறிஸ்து வாழத் தொடங்கும்போது, இறைவன் அவனில் வெளிப்பட்டு, எல்லாராலும் காணப்படுகிறார்.

பரிசுத்த ஆவியானர் நம்மையே புகழும்படி நம்மை வழிநடத்துவதில்லை. மாறாக இறைமகனை மகிமைப்படுத்தவே அவர் நமக்கு உதவி செய்கிறார். நாம்தான் இவ்வுலகத்திலேயே முக்கியமானவர்கள் போல நம்மீது கவனத்தைச் செலுத்தக்கூடாது. நமக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டிக்கே அனைத்து மகிமையும் செலுத்தப்பட வேண்டும். மரியாளும், இறைவனுடைய பரிசுத்தவான்களும் தங்களுடைய சிலைகளுக்கும் படங்களுக்கும் மக்கள் மரியாதை செலுத்துவதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவற்றை அவர்கள் பலிபீடத்திலோ, வீடுகளிலோ, பொது இடங்களிலோ எங்கு பார்த்தாலும் அவற்றை அழித்துவிடுவார்கள். இயேசுவைத் தவிர யாரும் இறைவனுடைய மகிமையை ஒருபோதும் பிரதிபலித்ததில்லை. இறைவனைத் தவிர நல்லவர் ஒருவரும் இல்லை. நாம் அவருடைய கிருபையினால் மட்டுமே நீதிமான்களாக்கப்பட்டு, பரிசுத்தப்படுத்தப்பட்டிருக்கிறோம். ஆகவே நாம் மரியாளிடத்திலோ அல்லது மற்ற பரிசுத்தவான்களிடத்திலோ விண்ணப்பிப்பதோ நமக்காக விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்வதோ பாவமான செயலாகும். இது இரண்டாவது கட்டளையை நாம் வெளிப்படையாக மீறும் செயலாக இருக்கிறது. ஏனெனில் நாம் நம்முடைய பரலோக பிதாவை நாம் நம்பாமல், அவருக்கும் அவருடைய தற்காலிக படைப்புகளாகிய அவருடைய பரிசுத்தவான்களுக்கும் இடையில் நம்முடைய நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்கிறோம். எந்த உருவமோ, சிலையோ, நினைவுச் சின்னமோ, பரிசுத்த பண்டமோ எந்த அற்புதமும் செய்ய முடியாது, யாருக்கும் சுகமளிக்கவும் முடியாது. இறைவன் தம்முடைய மகனாகிய இயேசுவின் மூலமாக மட்டுமே மக்களை மீட்கிறார். அனைத்து சிலைகளும், தேவாலயங்களில் இருக்கும் சிலைகள்கூட இறைவனுடைய பார்வையில் அருவருப்பானவைகளே.

புதிய உடன்படிக்கையில் நாம் இறைவனுடைய பிள்ûளாக இருக்கிறோம், அவரோடு தகப்பனாக நாம் தனிப்பட்ட முறையில் உறவுகொள்கிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் மரணமடைந்து பரிகாரத்தை உண்டாக்கியதாலும், இன்றும் தொடர்ந்து பிதாவின் வலது பக்கத்தில் இருந்து நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருப்பதாலுமே இது சாத்தியமாகிறது. நமக்கும் பிதாவுக்கும் இடையில் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்தவர் இறைமகன் இயேசுவே. கிருபையையும், நீதியையும், பாவ மன்னிப்பையும், வாழ்வையும நாம் பிதாவினிடத்திலிருந்தும் அவருடைய மகனிடத்திலிருந்தும் மட்டுமே பரிசுத்த ஆவியின் மூலமாகப் பெற்றுக்கொள்கிறோம். இதற்காக நாம் திரியே இறைவனுக்கு மட்டுமே நம்முடைய முழு இருதயத்தோடும் நன்றி செலுத்த வேண்டும்.


4.04.6 - இறைவனுடைய வைராக்கியம்

இறைவனை நேசிக்கிறவர்களுக்கும் இறைவனை விட்டு விலகுகிறவர்களுக்கும் இடையில் இருக்கின்ற வித்தியாசத்தை இரண்டாவது கட்டளையில் உள்ள தண்டனையிலிருந்தும் ஆசீர்வாதத்ததைக் குறித்த வாக்குறுதியில் இருந்தும் நாம் அறிந்துகொள்ள முடியும். இங்கே இறைவன் மறுபடியும் தன்னை “நான்” என்று வரையறுக்கிறார். அதாவது தான் சித்தமும் பேசுகின்ற திறனும் உள்ள உயிருள்ள நபர் என்பதைக் காண்பிக்கிறார். உண்மையுள்ள ஆண்டவராகிய அவர் எப்போதும் மாறாதவராகவும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறவராகவும் இருக்கிறார். அவர் நித்திய உடன்படிக்கையின் மூலமாக அவர் தம்மை நம்மோடு இணைத்திருப்பதோடு, நாமும் அவருக்கு நம்மை முழுவதுமாக உண்மையுடன் ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

இறைவன் நம்முடைய அன்பைக் கோருகிறார். அவருக்கே நாம் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும், ஒரு சிலைக்கோ, ஒரு சமயத்தைத் தோற்றுவித்தவருக்கோ, ஒரு அரசனுக்கோ, அல்லது பொன்னுக்கோ, அல்லது வெள்ளிக்கோ எதற்கும் நாம் நம்மை ஒப்புக்கொடுக்கக்கூடாது. அவர் மட்டுமே இறைவன், அவரைத் தவிர இரட்சகர் வேறு யாரும் இல்லை!


4.04.7 - இறைவனை வெறுக்கிறவர்கள் எல்லாரும் விழுந்து போவார்கள்

இறைவனுடைய அன்பைப் புறக்கணிக்கிறவர்கள் அல்லது அற்பமாகக் கருதுகிறவர்களுக்கு ஐயோ! அவர்கள் திராட்சைக் கொடியில் இருந்து வெட்டப்பட்ட கிளையைப் போல இருக்கிறார்கள். அவர்கள் காய்ந்து, உலர்ந்து போவார்கள். அவர்களுடைய முடிவு நித்திய நெருப்பே. நம்முடைய வாழ்வாதாரமாகிய இறைவனில் நாம் நிலைத்திருக்கத் தவறும்போது, நாம் ஆவிக்குரிய கலகக்காரர்களாக இருக்கிறோம். காரணம், நாம் அந்நிய ஆவிகளுக்கும், சிலைகளுக்கும், அல்லது அசுத்தமான வல்லமைகளுக்கு நம்மைத் திறந்துகொடுக்கிறோம், அல்லது நம்மையே கடவுளாக அறிவித்துக்கொள்கிறோம். இறைவன் தம்முடைய மகனோடும் பரிசுத்த ஆவியோடும் மட்டுமே தம்முடைய மகிமையைப் பகிர்ந்துகொள்வார். வேறு யாருக்கும் தம்முடைய மகிமையைக் கொடார். அவரைத் தவிர இவ்வுலகத்தைப் படைத்தவர் ஒருவரும் இல்லை. இவ்வுலகத்திற்கும் நித்தியத்திற்கும் நியாயாதிபதி அவரே.

ஒருவன் உண்மையான இறைவனிடத்தில் திரும்பாமல், மற்ற தெய்வங்களை நோக்கிப் பார்க்கும், அல்லது தானே இவ்வுலகத்தின் மையம் என்பதுபோல தன்னையே நோக்கிப் பார்க்கும் போது, அவன் பெருமையுள்ளவனாக மாறி, இறைவனுடைய அன்புக்கு அவனுடைய இருதயம் கடினப்பட்டுப்போகும். அப்படிப்பட்ட மனிதன் கொடூரமானவனாகவும் கொடியவனாகவும் மாறிவிடுவான். அவன் மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்குப் பதிலாக அவர்களைத் தன்னுடைய தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்வான். அவனால் இறைவனை நேசிக்க முடியாவிட்டால், எப்படி தன்னுடைய அயலானை நேசிக்க முடியும்? அவனுக்கு சரியான தராதரம் இல்லாத காரணத்தினால் இவ்வுலகத்தின் ஆவிக்குரிய பிரச்சனையை அவனால் புரிந்துகொள்ள முடியாது. அதனால் அவனுடைய மனசாட்சி மந்தமாகி, அவனுடைய ஒழுக்கம் சீரழிந்துபோகும். அவன் தன்னுடைய இருப்பை நிலைநிறுத்திக்கொள்வதற்காக கடுமையாகப் போராடும்போது, மிருகத்தைக் காட்டிலும் மோசமானவனாக மாறிவிடுகிறான்.

இறைவனைவிட்டு விலகிச் செல்வதில் உறுதியாக இருப்பவர்களை, எச்சரித்து, தம்முடைய அன்பை அவர்களுக்குக் போதிய அளவு காண்பித்த பிறகு, அவர்களை விட்டுவிடுகிறார். அவர்கள் தங்களையே கெடுத்துக்கொள்ளும்படி அவர்களுடைய இருதயத்தின் இச்சைகளுக்கு அவர் அவர்களை ஒப்புக்கொடுத்து விடுகிறார். அரசனாகிய சவுலும் யூதாஸ் ஸ்காரியோத்தும் இதற்கான முதன்மையான உதாரணங்கள். இந்த தெய்வீக விதிமுறை தனிநபர்களுக்கும் தேசங்களுக்கும் பொருந்தும். மணமானவர்கள் கூட தங்கள் வாழ்க்கைத் துணையினால் தீமைக்கு ஏதுவாக வழிநடத்தப்பட்டு, அதனால் அவர்களுடைய பிள்ளைகளும் பாதிக்கப்படுகிறார்கள். இவ்விதமாகத்தான் ஒரு தலைமுறையில் இருந்து மறு தலைமுறைக்கு அவபக்தி தொடருகிறது. ஒரு குடும்பம் கஞ்சத்தனத்தினால் அல்லது பொறாமையினால் ஆளப்படுமானால், அது அவர்களுடைய வாழ்க்கைச் சூழலிலும் நடத்தையிலும் நிச்சயமாக வெளிப்படும். மேலோட்டமான மனிதவியல் கருத்துக்களினாலும் சோசலிச நாத்திகத்தினாலும் தாக்கத்திற்கு உள்ளாகும்போதும் இதே விளைவைத்தான் நாம் எதிர்பார்க்க முடியும். ஒரு குடும்பத்தின் ஆவி அதன் பிள்ளைகளுடைய கண்களில் பிரதிபலிக்கும். சில குடும்பங்கள் தங்களுக்குச் சுகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அல்லது மறைவான காரியங்களை அறிந்துகொள்ள குறிசொல்லுதல், மாயவித்தைகள், மந்திரவாதம் ஆகியவற்றில் ஈடபடுகிறார்கள். இந்தக் காரியங்கள் அனைத்தையும் பாவங்கள் என்று இயேசு கண்டித்திருந்தாலும், தம்மிடத்தில் மனந்திரும்பி வருகிற எவரையும் அவர் புறம்பாக தள்ளுவதில்லை. அவர் அவர்களை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு சாத்தானுடைய சாபத்திலிருந்து அவர்களை விடுவிக்கிறார். “குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவான் 8:36) என்று சொன்னார். கிறிஸ்துவினுடைய அதிகாரத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. அவர் மட்டுமே எந்தவொரு சாத்தானுடைய கட்டையும் முறியடிக்கக்கூடியவர்.

உண்மையான மனந்திரும்புதல் ஏற்பட்டு குடும்ப அங்கத்தவர்கள் இறைவனிடத்தில் திரும்பவில்லை என்றால் அந்தக் குடும்பத்தின் இருதயக்கடினம் மூன்றாம் நான்காம் தலைமுறை வரைக்கும் தண்டிக்கப்படும் என்று இறைவன் போதிக்கிறார். பல தருணங்களில் பிள்ளைகளும் வளர்ந்து வரும் வாலிபரும்கூட தேவபக்தியற்ற மூதாதையரின் வாரிசுகளாகவே இருக்கிறார்கள். ஆயினும் தங்கள் சிந்தையிலேயே சீரழிந்திருக்கிறவர்களை நாம் நியாயம்தீர்க்காமல், அவர்களுடைய குடும்பப் பின்னணியைப் புரிந்துகொண்டு அவர்களை நேசிக்க வேண்டும். இறைமகனாகிய இயேசு கிறிஸ்துவை தீர்க்கமாகப் புறக்கணிக்கும் மூதாதையர்களுடைய போதனைகளில் தொடர்ச்சியாக வளர்க்கப்பட்ட பல யூதர்களும் முஸ்லீம்களும் இருக்கிறார்கள். அவர்கள் கூட்டாக பாவத்திற்கு அடிமைகளாக வாழ்கிறார்கள், அதனால் உலக இரட்சகரைப் புறக்கணிக்கிறார்கள். ஆகவே கிறிஸ்தவத்திற்கு எதிரான இப்படிப்பட்ட சக்திகளிலிருந்து விடுதலையடைய விரும்புகிறவர்கள், அவர்களோடு இருக்கும் முந்தைய தொடர்புகளையும் கலாச்சாரக் கட்டுகளையும் கிறிஸ்துவுக்காக மறுதலிப்பதற்கு ஆயத்தமாயிருக்க வேண்டும். நம்முடைய குடும்பத்தின் பாதுகாப்பையும், நாட்டின் பாதுகாப்பையும் விட்டுவிடும்போது இறைவன் உண்மையாகவே நம்முடைய பிதாவாக இருக்கிறார் என்பதை நாம் கண்டுகொள்வோம். அவர் நம்முடைய எதிர்காலத்தைப் பொறுப்பெடுத்துக்கொள்வார். “உங்களை எப்போதும் நேசிக்கும் தகப்பனாகிய இறைவனும் ஆண்டவரும் நானே. நான் உங்களை நேசிக்கிறேன். உங்களைப் பெயர் சொல்லி அழைத்திருக்கிறேன். நீங்கள் என்னுடையவர்கள். என்னைப் பற்றிக்கொள்ளுங்கள் தீமையும் அசுத்தமுமான அனைத்துத் தொடர்புகளையும் விட்டுவிடுங்கள். என்னுடைய உண்மையிலும் அதிகாரத்திலும் நம்பிக்கை வையுங்கள், அப்போது நீங்கள் நித்திய காலத்திற்கும் விடுதலையையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்வீர்கள்” என்று நமக்கு உறுதியளிக்கிறார்.


4.04.8 - இறைவனை நேசிக்கிறவர்களுக்கு அவர் தரும் அளவற்ற ஆசீர்வாதங்கள்

ஒருவன் இறைவனை நேசித்தால், அவருடைய வார்த்தையை வாசித்துத் தியானித்து, அவருடைய பெலத்தினால் வாழ்வான். அவருடைய கிருபையின் ஆழத்தை அறிந்த எவரும் அவருடைய விடுதலைக்காகவும் பொறுமைக்காகவும் தொடர்ந்து அவருக்கு நன்றி செலுத்துவார்கள். நாம் முழு இருதயத்தோடும் அவரிடத்தில் நன்றியுள்ளவர்களாக வாழும்போது நாம் அவர் மீது கொண்டிருக்கும் அன்பை நாம் சிறப்பாக வெளிப்படுத்துகிறோம். ஒரு நன்றியுள்ள விசுவாசி அனுதினமும் இறைவனுடைய வார்த்தையைப் தன்னுடைய செல்வமாகவும், வல்லமையாகவும், ஆசீர்வாதமாகவும், வழிநடத்துதலாகவும் பார்ப்பான். தன் மணவாளனிடத்திலிருந்து வந்த கடிதத்தை பிரிக்காமலும் வாசிக்காமலும் அதையே மறந்துவிடும் ஒரு மணவாட்டியைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அவள் தனது மணவாளனை நேசிக்கவில்லை என்றுதான் சொல்வோம். ஆனால், தன்னுடைய மணவாளனுக்கு உண்மையுள்ள ஒரு மணவாட்டியோ மணவாளனிடத்திலிருந்து வரும் கடிதங்களை ஆவலோடு எதிர்பார்த்திருப்பாள். எப்பொழுதெல்லாம் கடிதம் வருகிறதோ உடனே அதைப் பிரித்து, திரும்பத் திரும்ப அதை வாசித்து, சில சொற்றொடர்களைத் தியானிப்பாள். அவை அவளுடைய மனதில் நீங்காமல் பதிந்துவிடும். நாம் இறைவனை நேசிப்போமானால் இறைவன் பரலோகத்திலிருந்து நமக்குத் தனிப்பட்ட முறையில் எழுதிய காதல் கடிதத்தைப் போல கருதி அவருடைய வார்த்தையை நாம் படிப்போம். நாம் அதை எப்போதும் வாசித்து, முக்கியமான பகுதிகளை மனப்பாடம் செய்வோம். நாம் அவருடைய சித்தத்தைச் செய்யும் வல்லமையை நமக்குத் தரக்கூடிய இறை வார்த்தைகளினால் நம்முடைய இருதயங்கள் நிறைந்திருக்கும்.

பெற்றோர் தங்கள் குடும்பங்களுக்காக பொறுப்புடன் விண்ணப்பஞ் செய்வார்களானால், தங்கள் குடும்ப அங்கத்தவர்கள் மீது இயேசுவின் ஆசீர்வாதத்தைக் கொண்டுவருவார்கள். அவர்களுடைய பிள்ளைகள் தெய்வபயமற்றவர்களாக அல்லது பொறுப்பற்றவர்களாக வளரமாட்டார்கள். அதற்கு மாறாக அவர்கள் உறுதியான அஸ்திபாரத்தில் கட்டப்படுவார்கள். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அடிப்பதன் மூலமாக அவர்களுடைய தீமையை அவர்களைவிட்டு நீக்கிவிடவும் முடியாது, அதுபோல கிறிஸ்துவை நம்பச் செய்யவும் முடியாது. ஆனால், பெற்றோருடைய பாசமுள்ள முன்னுதாரணத்தின் மூலமாக, பிள்ளைகளுடைய ஆள்மனதில் நல்ல தாக்கத்தை அவர்களால் உண்டாக்க முடியும். பிள்ளைகள் தங்கள் பெற்றோருடைய வார்த்தைகளைவிட அவர்களுடைய நடத்தையைத்தான் அதிகமாக நினைவில் வைத்துக்கொள்கிறார்கள். ஒரு தாயினுடைய வார்த்தைகளைக் காட்டிலும் அவளுடைய கண்கள் அதிக சத்தமாகப் பேசக்கூடியதாகவும், அவளுடைய அன்பு கல்லறையையும் தாண்டிச் செல்லக்கூடியதாகவும் இருக்கின்றது.

இறைவனை நேசிக்கிறவர்களை ஆயிரம் தலைமுறைக்கும் ஆசீர்வதிப்பதாக அவர் வாக்களிக்கிறார்! பாவச் சோதனைகளும் அவபக்தியும் நிறைந்த ஒரு காலத்தில் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோருக்கு இந்த வாக்குறுதி மிகப் பெரிய ஆறுதலை அளிக்கிறது. சூரிய ஒளி ஒரு இருட்டறையை எப்படி ஊடுருவிச் செல்கிறதோ, அப்படி இறைவனுடைய அன்பின் வல்லமை இருளை ஊடுருவிச் செல்கிறது. பெற்றோர் விண்ணப்பஞ்செய்யும் விசுவாசிகளாக இருந்தால், ஒரு குடும்பத்தின் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் மிகவும் அதிகமாகப் பெருகும்.

ஆயிரம் தலைமுறை என்றால் எவ்வளவு காலம் என்று எப்போதாவது கணக்கிட்டிருக்கிறீர்களா? ஒரு தலைமுறையை நாம் 25 வருடங்கள் என்று கொண்டால், ஒரு உண்மையான விசுவாசி 25,000 வருடங்களுக்குரிய இறைவனின் அபரிமிதமான ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அல்லது, நாம் பேரப்பிள்ளைகளைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போமானால், பெரும் எண்ணிக்கையிலான சந்ததிகள், ஒரு ஆவிக்குரிய சேனை, விசுவாசித்துக் கீழ்ப்படியும் பெற்றோரினால் ஆசீர்வதிக்கப்படும். ஒவ்வொரு விசுவாசியும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்பின் வாய்க்காலாக இருப்பார் என்று இறைவன் தம்முடைய பிரியமானவர்களுக்கு வாக்களிக்கிறார். தாங்கள்தான் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தின் ஊற்று என்று இயேசுவின் சீடர்கள் யாரும் நினைக்க மாட்டார்கள். அவர்கள் இறைவனுடைய ஆசீர்வாதத்தின் வெறும் வாய்க்கால்களே என்பதை அறிந்திருப்பார்கள். இறைவன் தன்னை நேசித்து, பற்றிக்கொள்ளுகிறவர்களுக்கு நிபந்தனையற்ற முறையில் கிருபையின் மேல் கிருபை அருளுகிறவராக இருக்கிறார்.

நம்முடைய சரீர அல்லது ஆவிக்குரிய பெற்றோருடைய ஆசீர்வாதங்களின் விளைவை நாம் அனுபவித்திருப்போமானால், இவ்வுலகத்தில் இருக்கின்ற பல்வேறு கலாச்சாரங்களின் முக்கியத்துவத்தையும் நம்மால் நன்கு உணர்ந்துகொள்ள முடியும். ஒரு மக்கள் கூட்டத்தை அல்லது கிராமத்தை அல்லது ஒரு நகரத்தை இறைவனுடைய வார்த்தை நூறு வருடங்களுக்கு முன்பாகப் பாதித்திருந்தாலும் அதன் தாக்கத்தை நீங்கள் இன்றும் உணரலாம். இயேசு கிறிஸ்துவினால் விடுவிக்கப்பட்ட மக்கள் அவருக்கு நன்றி செலுத்தி ஒருவருக்கொருவர் சேவை செய்கிறார்கள். பரிசுத்த ஆவியினால் இறைவன் ஒரு கலாச்சாரத்தில் தாக்கத்தை உண்டாக்குவாரானால், அங்கிருக்கும் குடும்பங்கள், பள்ளிகள், பொருளாதாரம் மற்றும் அரசியல் ஆகிய அனைத்தும் நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்றபட்ட நிலையில் மாற்றமடைந்திருக்கும்.

இந்தியாவில் இருப்பதைப் போல இரத்தக்கறைபடிந்த தெய்வங்கள், சீனாவில் இருப்பதைப் போல மூதாதையர் வழிபாடு, அல்லது ஆப்பிரிக்காவில் இருப்பதைப் போல சிலைவழிபாடுகள் மற்றும் இகத்துக்குரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும்படி பின்பற்றப்படும் மந்திரவாதங்கள் ஆகியவை இருக்கும் கலாச்சாரங்களின் நிலை தலைகீழாக இருக்கின்றது. இந்தச் சமூகங்கள் பயத்தினாலும், அடிமைத்தனத்தினாலும், பதற்றத்தினாலும் ஆளப்படுகின்றன. இந்தக் கலாச்சாரங்களில் பெண்களை ஆண்கள் கொடுமையாக ஆளும்போது அவர்கள் குப்பைகளாகக் கருதப்படுகிறார்கள். பழங்குடியின மக்கள் நடுவில் நடைபெறும் யுத்தங்களினால் ஏழைகள் இன்னும் ஏழைகளாகவே மாறிக்கொண்டு போகிறார்கள். நீங்கள் ஒரு இந்து கிராமத்திற்கோ அல்லது இஸ்லாமிய கிராமத்திற்கோ அல்லது கிறிஸ்தவ கிராமத்திற்கோ செல்லும்போது அங்கிருக்கும் ஆவிக்குரிய சூழ்நிலையை உங்களால் சீக்கிரமாகவே புரிந்துகொள்ள முடியும். மிருகங்கள்கூட தாங்கள் இரக்கமற்ற முறையில் அடிக்கப்படுகிறோமா அல்லது மெதுவாக நடத்தப்படுகிறோமா என்பதை அறிந்துகொள்ளும்.


4.04.9 - பொருட்சுருக்கும்: வேதாகமரீதியான பிரிதல்

விசுவாசமுள்ள பெற்றோருடைய ஆசீர்வாதங்கள் மூதாதையர்கள் சளைப்பின்றி இறைவனை நேசித்ததன் மூலமாக குடும்பங்களிலும் தனிப்பட்டவர்களுடைய வாழ்விலும் வெளிப்படும். அப்படிப்பட்ட பெற்றோர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் தங்கள் முதிர்வயதுவரை விண்ணப்பிக்கிறவர்களாகவும் கடினமாக உழைக்கிறவர்களாகவும் ஒழுக்கமான வாழ்க்கை வாழந்தவர்களாகவும் இருப்பார்கள். உலகம் முழுவதிலும் இறைவனை நேசிக்கிறவர்களுக்கும் அவரை வெறுக்கிறவர்களுக்கும் இடையில் மாபெரும் வேறுபாடு காணப்படுகிறது. நீங்கள் இறைவனை உண்மையாகவே உங்கள் தகப்பனாக நேசித்தால், ஒரு பிள்ளையைப் போல் அவரைச் சார்ந்து, அவருடைய அன்பின் கனியை உங்கள் வாழ்வில் வளர்த்துக்கொள்வீர்கள். யாரேனும் இறைவனுடைய அழைப்பை நிராகரிப்பார்கள் என்றால், அவர்கள் கெட்டுப்போவார்கள். இந்தக் கடைசி காலத்தில் பலருடைய அன்பு தணிந்துபோவதைப் பார்ப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. ஒருவன் இறைவனிடத்தில் திரும்பவில்லை என்றால் அவன் தீமையின் தோற்றுவாயாக மாறிப்போகிறான். இறைவனுக்கு எதிராகக் கலகம் செய்யும்போது ஆபத்தான கருத்துக்கள் உருவாகும். காரல் மார்க்ஸ் வாலிபனாக இருந்தபோது பக்திமானாகத்தான் இருந்தார். ஆனால் அவர் மந்திரவாதக் குழுக்களோடு தொடர்புகொண்டபோது பலரைத் தவறான பாதையில் நடத்தினார். அவர்கள் செத்த பொருளியல்கொள்கையைப் பின்பற்றுகிறார்கள். ஆயினும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இறைவனுடைய முகத்திற்கு நேராக தங்கள் முஷ்டியை உயர்த்தினாலும் இவ்வுலகத்தில் அவர்களால் உழைப்பாளிகளுக்கான பரதீûஸ உருவாக்க முடியாது. உண்மையான அன்புக்கும் வாழ்வுக்கும் ஆதாரமான இறைவனை மறுதலித்து, மனிதர்களை தெய்வங்களாக மாற்றுகிறார்களோ, அவர்கள் வெறுப்பையும் கோபத்தையும் தங்கள் மனங்களில் புதுப்பித்து, நியாயத்தீர்ப்பு நாளில் பரிசுத்தருடைய கோபத்தை அறுவடையாகப் பெற்றுக்கொள்வார்கள்.

www.Grace-and-Truth.net

Page last modified on March 16, 2015, at 01:56 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)