Grace and TruthThis website is under construction ! |
|
Home Afrikaans |
Home -- Tamil -- 11-Presuppositional Apologetics -- 004 (What do we mean by presuppositional apologetics?)
This page in: -- Chinese -- English -- French? -- German -- Indonesian -- Russian -- TAMIL -- Ukrainian
Previous Chapter -- Next Chapter 11. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான விவிலிய அறிமுகம்
கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான தாக்குதல்களில் மறைந்திருக்கும் பொய்களையும் அடிப்படைத் தவறுகளையும் எப்படி அம்பலப்படுத்துவது?
பாகம் 1 – கிறிஸ்தவ கொள்கைக் காப்புரைக்கான அறிமுகம்
4. முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரை என்பதன் பொருள் என்ன?ஒரு கூற்று அல்லது கலந்துரையாடல் அல்லது விவாதம் கட்டியெழுப்பப்படும் அடிப்படை அனுமானத்தை நாம் முன்ஊகம் என்று சொல்கிறோம். இந்த முன்ஊகங்கள் அனைத்தையும் விளக்குவதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் பரந்துபட்ட, ஆரம்பப் புள்ளியாக அமைவதாக இருக்கின்றன. அப்படிப்பட்ட முன்ஊகங்கள் ஒருவருடைய சிந்தனையில் மிகப்பெரும் அதிகாரமாகத் திகழ்கின்றன. அந்த முன்ஊகங்களை மாற்றிக்கொள்ள ஒருவர் ஆயத்தமாக இருக்க மாட்டார். அவை மாற்றப்பட முடியாதவை என்றே கருதப்படும். உதாரணமாக, ஒருவருடைய கடிகாரம் பழுதடைந்திருக்கிறது அல்லது அதிக தாமதமாகவோ, அதிக விரைவாகவோ ஓடுகிறது என்பதை அவர் அறிந்துகொண்ட பிறகு, சரியான நேரத்தைக் குறித்து அவருடைய மனதை மாற்றுவது இலகுவானது. ஆனால், ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் தனது பெற்றோர் என்று கருதி வந்த இருவர் அவருடைய பெற்றோர் அல்ல அவர் ஒரு தத்துப்பிள்ளை என்பதை அவருக்குப் புரிய வைப்பது இலகுவான காரியம் அல்ல. உங்களுக்குப் பெற்றோர் இல்லை என்றும் நீங்கள் இதுவரை உங்கள் பெற்றோர் என்று நினைத்துக்கொண்டிருந்தவர்கள் உங்கள் பெற்றோர் அல்ல என்றும் வேறு பெற்றோர் உங்களுக்கு இருக்கின்றனர் என்பதையும் அல்லது உங்களுக்குப் பெற்றோரே இல்லை என்பதையும் உங்களுக்குச் ஒருவர் சொல்கிறார் என்று கற்பனை செய்து பாருங்கள். அல்லது நீங்கள் ஆதாமைப் போல பெற்றோர் இல்லாமலே இந்த உலகத்திற்கு வந்துவிட்டீர்கள் என்று கூறுவாராயின் என்ன சொல்வீர்கள். இதற்கு ஆதாரமாக சில தாள்களையோ அல்லது சில புத்தகத்தின் மேற்கோள்களையோ காட்டினால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? அந்த கூற்று உயிரியலைப் பற்றியும் குழந்தைகள் உலகத்தில் பிறப்பதைப் பற்றியும் உங்களுக்கு இருக்கும் அறிவுக்கு முற்றிலும் முரணாக இருக்கிறதல்லவா? இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமாயின் உங்கள் சிந்தனையில் பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும். நாம் பேசுகின்ற காரியங்களில் பல முன்அனுமானங்களின் அடிப்படையில்தான் பேசப்படுகின்றன; பல நேரங்களில் அவற்றை நாம் சாதாரணமாகப் பேசினாலும் அவற்றில் மிகத் தந்திரமான உட்பொருட்கள் அடங்கியிருக்கும். உதாரணமாக, “நான் அந்த கண்ணாடியை உடைக்கவில்லை, என்னுடைய சகோதரிதான் உடைத்தாள்” என்று ஒருவர் கூறும்போது இந்த கூற்று முதலில் கண்ணாடி உடைந்துவிட்டது என்ற முன்ஊகத்தின் அடிப்படையில் பேசப்படுகிறது. இப்படி கிறிஸ்தவர்கள் எந்த வகையான முன்ஊகங்களைக் கொண்டிருக்கிறார்கள் அல்லது கொண்டிருக்க வேண்டும்? கொலோசெயர் 2:8-ல் பவுல் கூறும்போது கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் மனிதர்களுடைய பாரம்பரியங்களையும் இவ்வுலகத்தின் முதிர்வற்ற கொள்கைகளையும் அடிப்படையாகக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்துகிறார். அவை “மாயமான தந்திரம்” என்கிறார் அவர். அவற்றிற்கு மாறாக நாம் உண்மையின் கிறிஸ்துவையே அத்திபாரமாகக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். “லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயேல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.” (கொலோசெயர் 2:8). இங்கு உலக வழிபாடுகள் என்று குறிப்பிடப்படுவது பஞ்ச பூதங்களைப் பற்றிய முன்ஊகங்களைக் குறிக்கிறது (தமிழில் பொது மொழிபெயர்ப்பாகிய திருவிவிலியத்தைப் பார்க்கவும். கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் இவ்வுலகின் பஞ்ச பூத தத்துவங்களை அடிப்படையாகக் கொள்ள முடியாது. இதன் முக்கியத்துவத்தைப் பற்றி நாம் மீண்டும் சிந்திப்போம். |