Previous Chapter -- Next Chapter
26. ஞானி எங்கே? (1 கொரிந்தியர் 1:20)
இதுவரை நாம் மீண்டும் மீண்டும் பல்வேறு வழிகளில் வலியுறுத்தியிருப்பது என்னவென்றால் முன்ஊகக் கிறிஸ்தவ கொள்கைக் காப்புரையின் தத்துவமே முழு உலக நோக்கையும் ஒப்பிட்டுப் பார்ப்பதுதான். நாம் கிறிஸ்தவத்தை மீண்டும் முதலில் இருந்து கட்டுவதில்லை. முழு கிறிஸ்தவ சிந்தனா அமைப்பு முறையையும் அவநம்பிக்கையாளர்களின் முழுச் சிந்தனா அமைப்பு முறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கப் போகிறோம். அவநம்பிக்கையாளருடன் ஒவ்வொன்றாக பல காரியங்களை நாம் பேசலாம் எனப்து உண்மைதான். ஆனால் நாம் அவர்களுக்குக் காண்பிக்கப் போவது கிறிஸ்தவ உலகப் பார்வை இன்றி அவர்களால் இந்த உலகத்தில் எதையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது என்பதைத்தான். என்னுடைய நீண்ட கால அனுபவத்தில் இதுதான் அனைத்தையும்விட மிகவும் முக்கியமானது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். நம்பிக்கையாளரோ அவநம்பிக்கையாளரோ அவருக்கு நான் மீண்டும் மீண்டும் காண்பிப்பது அவநம்பிக்கையாளர்களுடைய உலகப் பார்வையால் தர்க்கநியாயம், அறிவியல், ஒழுக்கம், பௌதீகம், கணிதம், பொருள், புலன் அனுபவங்கள், மொழி, காலத்தின் ஓட்டத்தில் மனித அடையாளம், பாவம், மீட்பு போன்ற எந்த காரியத்தையும் சரியாக விளக்க முடியாது என்பதையே. இப்படி நான் அவர்களுடன் பேசும்போது அவர்கள் திரும்பிக்கொண்டு, “அப்படியானால் இதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்பார்கள்.
ஒரு உலக நோக்கு தன்னுடைய மொழியைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் அது எதைப் பற்றியும் கேட்க முடியாது; அத்துடன் அதன் கதை முடிந்தது. ஒரு நம்பிக்கையின் பொருளற்ற தன்மையை நான் ஒரு காப்புரையாளராகக் காண்பித்துவிட்டால் என்னுடைய பணி முடிந்துவிட்டது. இப்போது மொழியின் அடிப்படையை அல்லது தர்க்கவாதத்தின் அடிப்படையைக் குறித்து விளக்க முடியாத ஒரு அவநம்பிக்கையாளர் கிறிஸ்துவையா அல்லது பொருளற்ற நம்பிக்கையையா எதைத் தெரிவுசெய்வது என்பது அவருடைய கரத்தில் இருக்கிறது. நான் இன்னொரு உதாரணத்தையும் பயன்படுத்தலாம், ஆனால் அது உதாரணம் மட்டும்தான். நான் கிறிஸ்தவ உலக நோக்கை கட்டி எழுப்புவதில்லை. அது ஏற்கனவே முழு சிந்தனை அமைப்பாக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய ஆசிரியர்களில் ஒருவர் இப்படிச் சொன்னார்: “சில நேரம் நீங்கள் வேட்டைக்குப் போய் ஒரு கரடியைக் கண்டுபிடிக்கிறீர்கள். நீங்கள் குறிபார்த்து சுடுகிறீர்கள், ஆனால் கரடி உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. மீண்டும் சுடுகிறீர்கள். அது இன்னும் உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. மீண்டும் சுடுங்கள். ஏனெனில் சில கரடிகளை வீழ்த்துவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தோட்டாக்கள் தேவைப்படலாம்.” இவற்றை மனதில் கொண்டவர்களாக ஒருசில உலக நோக்குகளையும் அவற்றில் உள்ள குறைபாடுகளையும் உதாரணங்களுடன் சிந்திப்போம்.