Previous Chapter -- Next Chapter
28. பொருள்முதல்வாத நாத்திகத்தின் இறைநம்பிக்கையற்ற உலக நோக்குக்கு பதிலுரைத்தல் – சமயச்சார்பின்மை வாதம்
பல அவநம்பிக்கையாளர்கள் இன்று பொருள் முதல்வாத உலக நோக்கை அறிந்தும் அறியாமலும் தமதாக்கிக் கொள்கிறார்கள். நம்முடைய பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் இந்த பொருள்முதல்வாதத்திற்காக மக்களுக்கு மூளைச்சலவை செய்யும் கூடங்களாகச் செயல்படுகின்றன. வாலிபர்கள் நடுவில் நாத்திகம் எப்படி வளர்கிறது என்பதைக் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் இதுவரை செய்யப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் செய்திப் பத்திரிகையான கார்டியன் என்பது ஐரோப்பாவில் கிறிஸ்தவத்திற்குப் பிந்தைய சிந்தனைகளைப் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது*. பல நாடுகளில் வயது 16-20 வரையில் உள்ளவார்கள் தங்களுடைய அல்லது தங்கள் பெற்றோருடைய நம்பிக்கையை கைவிடுவது பெருகி வருகிறது. எஸ்தோனியா, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள வாலிபர்களில் 70% அல்லது 80% வாலிபர்கள் தங்களை மத நம்பிக்கையற்றவர்கள் என்று அறிவித்துக்கொள்கிறார்கள். செக் குடியரசில் இது 91% எட்டியிருக்கிறது. இதேவிதமான ஆய்வுகள் அமெரிக்க மற்றும் ஆஸ்ரேலிய நாடுகளிலும் நடத்தப்பட்டு இதே முடிவுகள் பெறப்பட்டிருக்கின்றன.
வாலிபர்கள் இவ்வாறு கல்லூரிகளுக்குச் செல்லும்போது இத்தகைய புதிய உலக நோக்குகளை எதிர்கொள்ள ஆயத்தமற்றவர்களாக இருப்பது அவர்கள் தங்கள் நம்பிக்கையை இழப்பதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். அவ்வாறு ஆயத்தமின்றி அவர்கள் கல்லூரிகளுக்குச் செல்லும்போது அவர்களுடைய பெற்றோர்களிடம் அல்லது திருச்சபைகளில் அவர்கள் கேட்ட காரியங்கள் அனைத்து வழிகளிலும் தாக்கப்படுவதைப் பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் கிறிஸ்தவ உலகப் பார்வை தவறானது என்ற முடிவுக்கு அவர்கள் இலகுவாக வந்துவிடுகிறார்கள். பொருள் முதல்வாத உலக நோக்கை எப்படிக் கையாள்வது என்று அவர்களுக்குத் தெரியாது, ஏனெனில் இதற்கு முன் அவர்கள் அதைச் சந்தித்ததில்லை. அதன் விளைவாக அவர்கள் சீக்கிரமாகவே பொருள்முதல்வாத நாத்திகத்திற்கு மூளைச்சலவை செய்யப்பட்டு விடுகிறார்கள். இது மேற்குலகில் பொதுவானதாகக் காணப்படுவதால் இந்த சிந்தனை அமைப்பு முறையைப் பற்றிய பரிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி பொருள் முதல்வாதம் பேசுகிறவர்கள் உலகில் பொருட்கள் மட்டும்தான் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். அறிவு புலன் உணர்வுகள் மூலமாகவே பெற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்த உலக நோக்கை நம்புகிறவர்கள் நீங்கள் சந்திக்கக்கூடிய மனிதர்களிலேயே முன்னுக்கு முரணான மனிதர்களாக இருப்பார்கள். உதாரணமாக, பெரும்பாலும் இயற்கைவாதிகள் அனைவரும் தர்க்கநியாயம், பகுத்தறிவு, அண்டங்கள் குறித்த ஆய்வு, கணிதம் மற்றும் ஒழுக்கவியல் விதிகள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். அவைகள்தான் பிரச்சனைகளுக்கான தீர்வு என்றும் மனிதர்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்துக்கும் அறிவியல் தீர்வு தந்துவிடும் என்றும்கூட அவர்கள் சிந்திக்கிறார்கள். ஆனால், அவர்கள் அறிவித்துக்கொண்ட உலக நோக்குக்கு அவர்கள் உண்மையாக இருப்பார்கள் என்றால் இந்த காரியங்கள் எதுவுமே இருக்க முடியாது. ஏனெனில் இவை எதுவுமே பொருட்கள் அல்ல. நாம் இயற்கைவாதியாக இறைமறுப்புக் கோட்பாட்டாளருடன் பேசும்போது, “மூடனுக்கு அவனுடைய மூடத்தனத்தின்படி பதிலுரைக்க வேண்டும்” என்ற வேதாகமகக் கூற்றின்படி அவர்களிடம் இப்படிக் கேட்க வேண்டும்: இயற்கைவாதிகளாக நாம் இதைப் பற்றிய எந்தவொரு கலந்துரையாடலிலும் நாம் எப்படி ஈடுபட முடியும்? கலந்துரையாடலில் ஈடுபடும்போது நாம் “உண்மையை” தேடுகிறோம் என்றுதானே பொருள். மேலும் நாம் தர்க்கநியாயத்தைப் பயன்படுத்த வேண்டும், அல்லது நாம் தர்க்கநியாயமற்றவர்களாகவும் முரண்பாடுள்ளவர்களாகவுமே இருப்போம். ஒழுக்கவியல் சார்ந்த விதிகளை நாம் முன்ஊகிக்க வேண்டும். அல்லது நாம் மற்றவர்களுடைய நம்பிக்கைகளை மாற்றச் சொல்ல வேண்டும் அல்லது பொய் சொல்ல வேண்டும் அல்லது ஏமாற்ற வேண்டும். ஆனால் இவையனைத்தும் கிறிஸ்தவ உலக நோக்கில் முழுமையான பொருளைத் தருகின்றன. ஆனால் அவை இயற்கைவாதியின் உலக நோக்கில் எந்த பொருளையும் தருவதில்லை. ஆகவே, ஒரு இயற்கைவாதிக்கு இரண்டில் ஒரு தேர்வு மட்டுமே இருக்கின்றது: தங்கள் உலக நோக்கு தவறு என்று ஏற்றுக்கொண்டு அதைக் கைவிடுவது (வேறு வார்த்தைகளில் சொன்னால் மனந்திரும்புவது) அல்லது அவர்களுடைய உலக நோக்கு அனுமதிக்காத காரியங்களைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்வது.
ஒரு இயற்கைவாதியோடு பேசும்போது அவர்களுடைய உலக நோக்கு தவறானது என்பதைக் காண்பிக்க இன்னும் பல உதாரணங்களைப் பயன்படுத்த முடியும். உதாரணமாக, பகுத்தறிவு, இயற்கையிலுள்ள விதிகள், மாற்ற முடியாத தத்துவங்கள், வாழ்வின் தோற்றம், இயற்கையின் உத்திசைவு, தனிப்பட்ட சுதந்திரம், சுயாதீன சித்தம், மனித மாண்பு போன்ற எதையுமே அவர்களுடைய உலக நோக்கு விளக்க முடியாது என்பதைக் காண்பிக்கலாம். இங்கே கிறிஸ்தவத்தை நாம் ஒவ்வொன்றாக விளக்காமல் ஒரு முழு உலகப் பார்வையாக முன்வைக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். இருப்பினும், பரிசுத்த ஆவியானவர் அவர்களை உணர்த்தும்வரை அவநம்பிக்கையாளர்கள் எதையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அப்போது காப்புரையாளர் தொடர்ந்து தன்னுடைய கருத்துக்களை வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அதனால்தான் ஒன்றுக் மேற்பட்ட உதாரணங்களை வழங்குதல் பயனுள்ளதாக இருக்கும்.