Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 09. Comparisons -- 4.13 Conclusion: The Law and the Gospel

Previous part

09. இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் – ஒப்பாய்வு
Comparisosns 4 - பத்து கட்டளைகள்

4.13 - முடிவுரை: நியாயப்பிரமாணமும், நற்செய்தியும்



இயேசுவிடம் ஒருமுறை ஒரு வேதபாரகன் கேட்டான். “கற்பனைகளில் பிரதானமான கட்டளை எது?” இயேசு உபாகமம் 6:5 மற்றும் லேவியராகமம் 19:18லிருந்து இரண்டு வசனங்களில் பதிலளித்தார். “உன் இறைவனாகிய கர்த்தரை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அன்பு கூருவாயாக, உன்னை நேசிப்பது போல உன் அயலானை நேசிப்பாயாக.

இந்த வார்த்தைகளில் இயேசு பத்து கட்டளைகளை சுருக்கமாக தொகுத்து கூறினார். பத்து கட்டளைகளில் முதல் பகுதி இறைவனுடனான நம்முடைய உறவை விவரிக்கிறது. அவர் நம்முடைய சிருஷ்டிகர், இரட்சகர் மற்றும் தேற்றரவாளன் என்பதை தெரிவிக்கிறது. இரண்டாம் பகுதி நம்முடைய சகோதரரிடத்தில் நம்முடைய உறவைக் காண்பிக்கிறது. அவருக்கு நாம் செய்ய வேண்டிய சேவையை தெளிவாகக் காண்பிக்கிறது.

இந்த இறைபக்தியுள்ள மனிதனின் கேள்விக்கு இயேசு சலிப்புடன் எதிர்மறையான பதிலைத் தரவில்லை. நாம் தவிர்க்க வேண்டிய செயல்களைக் குறித்தும் அவர் பேசவில்லை. மாறாக நேர்மறையுடன் நியாயப்பிரமாண நிறைவேறுதலுக்கு நேராக அவனை மகிழ்ச்சியுடன் வழிநடத்தினார். அந்த கட்டளைகள் ஒரே நோக்கத்துடன் தொகுத்துரைக்கப்பட முடியும். இறைவனையும் மக்களையும் தூய அன்புடன் நேசியுங்கள். நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். நாம் எவ்வளவு தூரம் இறைவனை நேசிக்கிறோம், நாம் உண்மையாகவே நம்முடைய நண்பர்களை நேசிக்கிறோமா? நம்முடைய எதிரிகளை நேசிக்கிறோமா? இந்த இடத்தில் நாம் எவ்வளவு தூரம் பத்துக்கட்டளைகளை நிறைவேற்றுகிறோம் என்பதைக் காண முடியும்.


4.13.1 - நாம் இறைவனை நேசிக்கிறோமா?

இறைவனை நேசிப்பது என்பது அதிக மதிப்புள்ளது. கட்டளைகள் சரியாக நிறைவேற்றப்படும்போது நாம் உண்மையாக இறைவனை நேசிக்கும் போது நம்முடைய நேரம், பணம், மற்றும் திட்டம் ஆகியவைகளை நமக்காக செயல்படுத்த மாட்டோம். நாம் அவரிடமிருந்து ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தை பெற்றுள்ளோம். நம்முடைய ஆசைகள், சித்தம் மற்றும் நம்பிக்கை ஆகியவைகள் அவருடைய அன்பினால் நிரப்பப்பட்டும், உருவாக்கப்பட்டும் இருக்கின்றன. நம்முடைய வாழ்வின் மையமாக பரிசுத்தமுள்ள சிருஷ்டிகளும், மீட்கும் இரட்சகரும் இருப்பாராக. அவரைத் தவிர வேறெதுவும் முக்கியம் அல்ல. நம்முடைய பகுக்க முடியாத, அவர் மீதான முழுமையான அன்பை எதிர்பார்க்கிற வைராக்கியமுள்ள இறைவனாக அவர் இருக்கிறார். இன்னொருவர் இதில் பங்குபோட அவர் விரும்புவதில்லை. எனவே நாம் இந்த கேள்வியை எதிர்கொள்கிறோம். இறைவன் நம்மை நேசித்ததைப் போல, இப்போதும் நம்மை நேசிக்கிறதைப் போல நாம் இறைவனை நேசிக்கிறோமா? நாம் எவ்வளவாய் உண்மையில் அவரை நேசிக்கிறோம்? நாம் அவருடைய வார்த்தையை தியானித்தவர்களாக உணர்வுப்பூர்வமாக நம்முடைய சிந்தனையில் அவரை நேசிக்கிறோமா?. அவருடைய உதவியுடன் அவரது சித்தத்தை அறிய, அதை நிறைவேற்ற நாம் முயலுகிறோமா? நம்முடைய முழுமையும் அவருடைய கிருபைக்காக அவரை துதிக்கட்டும். அவர் கொடுத்திருக்கும் புதிய ஜீவனில் நாம் வாழ்கிறோம். நாம் செய்கிற காரியங்கள், விலகியிருக்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் அவரை கனப்படுத்துவோம். நம்முடைய எல்லா பாவங்களையும் கிறிஸ்து இயேசுவில் இலவசமாக அவரது பரிகாரப் பலி மூலமாக முழுமையாக மன்னித்ததற்காக அவருக்கு நன்றி செலுத்துவோம். மகிழ்ச்சி மற்றும் சமாதானத்திற்காகவும் நம்முடைய இருதயங்களில் அவர் ஊற்றியிருக்கிற ஆறுதலின் ஆவிக்காகவும், அவரை துதிப்போம். நம்முடைய அன்பு போதுமானதல்ல. நாம் எப்போதும் நம்முடைய முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் இறைவனை நேசிக்கிறதில்லை. எனவே அவரை நேசிப்பதற்கு கூட, நாம் அவரிடம் உதவியை நாட வேண்டும். இறைவன் எவ்விதம் நம்முடைய விண்ணப்பங்களுக்கு பதிலளித்துள்ளார் என்பதை பவுல் நமக்கு காண்பிக்கிறார். “மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.” (ரோமர் 5:5). நாம் அவரை உண்மையாக நேசிக்கும்படி பரலோகத்தின் பிதா நமக்கு அவருடைய சொந்த அன்பை தந்தருளியுள்ளார். நமக்குள் பரிசுத்த ஆவியானவர் வாசம்பண்ணுவதுபோல நம்முடைய இருதயங்களில் அவருடைய அன்பு நிறைந்திருக்கிறது.


4.13.2 - நம்முடைய சகோதரர்களை நம்மைப் போல நேசிக்கிறோமா?

இறைவனின் கண்களைக் கொண்டு நம்மை சுற்றியுள்ள மக்களைக் காணும்படி அன்புள்ள ஆவியானவர் நம்மை பெலப்படுத்துகிறார். ஆகவே இயேசுவின் கிருபையை அவர்களுக்கு சாட்சியிடுவோம். பாவிகள் மீதான அவருடைய மீட்கும் அன்பை விவரிப்போம். நம்மைப் போல அவர்களை நாம் நேசிப்போம் என்றால், நாம் அவர்களுக்காக விண்ணப்பம் ஏறெடுப்போம், அவர்களுக்கு சேவை புரிவோம். நாம் பசியாய் இருப்போமென்றால் உணவைக் கண்டுபிடிக்க அனைத்து காரியங்களையும் செய்து முயற்சிப்போம். நாம் பயப்படுவோம் என்றால், தப்பிக்கும் வழியை கண்டுப்பிடிக்க முயல்வோம். நாம் சோர்வுடன் இருந்தால், தூங்கிவிடுவோம். அதுபோல, கிறிஸ்துவின் அன்பு பசியுள்ளவர்களை போஷிக்கும்படியும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலை செய்யும்படியும், சோர்வுற்றோருக்கு ஆறுதலைத் தரவும் நம்மை வழிநடத்துகிறது. இயேசு ஒவ்வொருவரையும் அதிகமாய் நேசித்தார். எனவே தான் நம்முடன் அவர் தன்னை சமமாக்கி அடையாளப்படுத்தினார். அவர் நம்மில் ஒருவரைப் போல் ஆனார். அவர் இராஜாதி இராஜா என்பதை முன்பாகவே நமக்கு காண்பித்திருக்கிறார். நியாயத்தீர்ப்பு நாளில் தன்னைப் பின்பற்றியோரை கேள்வி கேட்பார். “அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். (மத்தேயு 25:34-40)

இயேசு இறைவனின் அன்பையும், மனிதனின் அன்பையும் தமக்குள் இணைத்திருக்கிறார். நாம் இயேசுவிடம் கேட்கும் போது, அவருடைய அன்பில் நம்மை உறுதிப்படுத்துவார். அப்போது நாம் இறைவனை சேவிக்கவும், தேவையுள்ளோரை சந்திக்கவும் முடியும். நம்மை காப்பாற்றிக் கொள்ளும்படியாக நாம் அவரை சேவிக்கவில்லை. ஆனால் நாம் முன்பாகவே அவரை சேவிக்க இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். இஸ்லாமியர்கள் நினைப்பது போல நம்முடைய நற்செயல்கள் மூலம் வருகிற சுயநீதியை சார்ந்தது அல்ல நம்முடைய அன்பு. கிறிஸ்து இயேசுவில் நிறைவேற்றி முடிக்கப்பட்ட இரட்சிப்பை சார்ந்தது தான் நம்முடைய அன்பு.


4.13.3 - கூடுதல் தெளிவான அர்த்தம்

மோசேயின் நியாயப்பிரமாணத்தின் அர்த்தத்தை கிரகித்துக்கொள்ள நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மூலமாக இரட்சிப்பின் நற்செய்தி நம்மை வழிநடத்துகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், பத்துக்கட்டளைகள் நம்மை நாமே அழித்துக் கொள்ளாதபடி தடுக்கிறது, நமது மகிழ்ச்சியை உறுதிப்படுத்துகிறது. இயேசு பணக்காரனிடம் இவ்விதமாகச் சொன்னார். “கற்பனைகளைக் கைக்கொள். அப்போது நீ நித்தியஜீவனை சுதந்தரித்துக் கொள்வாய்”. சந்தேகத்திற்கிடமின்றி, இறைவனுடைய கட்டளைகளில் நடக்கிற தேசம் மற்றும் அவைகளின் படி வாழுகிற மக்கள், எல்லா வழிகளிலும் அதிகமாக ஆசீர்வாதங்களை அனுபவிப்பார்கள். நாம் நியாயப்பிரமாணத்தை தியானிக்கும் போது, அது நம்முடைய பெருமையை அசைக்கிறது மற்றும் நம்முடைய கேள்வி கேட்கிறது. நியாயப்பிரமாணம் என்பது வெறுமனே சட்ட திட்டங்கள் அல்ல. இறைவனுக்கு நம்முடைய முழுமையான அர்ப்பணிப்பையும் பாவத்திலிருந்து முழுமையாக பிரிந்து வருவதையும், அது குறிவைத்து செயல்படுகிறது.

இறைவன் அடிக்கடி கூறுகிறார். “நான் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் பரிசுத்தராயிருங்கள். “ இறைவன் தேவபக்தியில் திருப்தியாகிறவர் அல்ல. அல்லது மற்ற மதங்களில் உள்ளது போன்ற இயல்பான மதத்தன்மையிலும் திருப்தியாகிறவர் அல்ல. அதற்குப்பதிலாக, அவர் நம்மை மாற்றியமைக்க விரும்புகிறார். நம்முடைய வார்த்தை மற்றும் செயல்களில் நம்முடைய துன்மார்க்க நிலையிலிருந்து அவரது சொந்த சாயலுக்கு நம்மை மறுபடியும் கொண்டு வருகிறார். இயேசு நமக்கு கட்டளையிட்டுள்ளார். “உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல நீங்களும் பூரண சற்குணராயிருங்கள். நம்முடைய பரலோகப் பிதா நம்மிடம் செயல்பட்டது போல, நாமும் நம்முடைய எதிரிகளை நேசிக்கவும், புறக்கணிக்கபட்டோர் மீது இரக்கம் காண்பிக்கவும் அவர் வழிநடத்துகிறார்.


4.13.4 - நம்முடைய அழிவிற்கு நியாயப்பிரமாணம் காரணமாய் உள்ளதா?

பரிசுத்த இறைவன் விதித்துள்ள கட்டளைகளை ஒருவன் புரிந்துகொண்டால், அவைகளுக்கு உண்மையாய் கீழ்ப்படிய முயற்சித்தால், அவன் நடுக்கத்துடன் கேட்க வேண்டும். “இறைவன் நேசித்தது போல நேசிப்பதற்கு இந்த அழிந்துபோகக் கூடியவன் எம்மாத்திரம்? இறைவன் பரிசுத்தராய் இருக்கிறது போல யார் பரிசுத்தமாய் இருக்க முடியும்?” நியாயப்பிரமாணம் நம்முடைய இரகசியங்களை வெளிப்படுத்துகிறது. அது நம்முடைய முகங்களுக்கு முன்பாக பரிசுத்தத்தின் கண்ணாடியை கொண்டு வருகிறது. நம்முடைய பாவமான நிலையை வெளிப்படுத்துகிறது. நியாயப்பிரமாணம் பாவிகளை ஒழுங்குபடுத்துகின்றது. அவர்களது உறக்க நிலையில் இருந்து அவர்களை எழுப்புகிறது. இறைவனின் நியாயத்தீர்ப்பு ஒவ்வொருவருக்கும் நித்திய தண்டனையைக் கொண்டு வருகிறது. ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்து, ஏதேனும் ஒன்றில் தவறினாலும் அவன் குற்றவாளியாய் இருப்பான்.

ஒருவன் தன்னுடைய வாழ்வை பத்துக்கட்டளைகளின் வெளிச்சத்தில் சோதித்துப்பார்க்கும்போது, தன்னுடைய அனுதின வாழ்வில் உள்ள சிறிய மற்றும் பெரிய விக்கிரகங்களைக் காண்கிறான். ஆண்டவருடைய நாமத்தை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் ஓய்வு நாளை மீறியது போன்றவற்றிற்காக இறைவனால் நித்திய மரணத்திற்கென்று நியாயந்தீர்க்கப்பட்டதை உணர்கிறான். ஒருவன் கிறிஸ்துவின் தூய்மைக்கு முன்பாக தன்னை அளவிட்டுப் பார்க்கும்போது, அவன் நொறுக்கப்படுகிறான். நியாயப்பிரமாணம் எல்லா மக்களுக்கும் அழிவைக் கொண்டுவருகிறது என்ற முடிவுக்கு வருகிறான்.

நம்மை தொடர்ச்சியான மனந்திரும்புதலுக்கு நேராக நடத்துவதற்கு நமது அசுத்தமான நிலையை நியாயப்பிரமாணம் வெளிப்படுத்துகிறது. நம்முடைய சுய நீதி மற்றும் நம்முடைய பெருமையை நியாயப்பிரமாணம் தகர்க்கிறது. நமது சுயநீதியினால் அல்ல, அவருடைய பெரிதான இரக்கத்தின் அடிப்படையில் தான் நாம் நியாயம் தீர்க்கப்படுவோம் என்று அறிந்திருந்தாலும், பரிசுத்தமுள்ள இறைவன் முன்பாக நடுக்கத்துடன் நிற்க வேண்டும். நாம் நியாயப்பிரமாணத்தின் அடிப்படைக் காரியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் கிறிஸ்தவர்களாக நியாயப்பிரமாணத்திற்கு கீழாக இல்லை. நாம் இயேசுவின் கிருபையால் இருக்கிறோம்.

இயேசு யோவான் ஸ்நானகனிடம் வந்தார். தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் ஞானஸ்நானம் எடுத்தவர்கள் மத்தியிலிருந்து சீஷர்களை உருவாக்கினார். தாங்கள் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிக்கிறோம். என்று கூறி தங்களது இறைபக்தியை காண்பித்த மக்கள் மத்தியில் இருந்து, அவர் சீஷர்களைத் தெரிவு செய்யவில்லை. அதற்குப் பதிலாக தங்களது பாவங்களை அறிக்கையிட்டவர்கள் மற்றும் இறைவனின் நீதியுள்ள நியாயத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க முயற்சிப்பவர்கள், தங்களுடைய பழைய சுபாவத்தை மறுதலிப்பவர்கள் மற்றும் தண்ணீர் ஞானஸ்நானத்தில் அதை மரணத்துக்கு உட்படுத்தியவர்கள் ஆகியோரை அவர் தெரிந்துகொண்டார். அவர்களை ஆவிக்குரிய வாழ்வில் கட்டியெழுப்பக் கூடியவராக இயேசு இருந்தார். நியாயப்பிரமாணத்தின் ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து அவர்களை விடுவிக்க கூடியவராக இருந்தார். அவர்கள் உண்மையாகவே மனந்திரும்பியவர்களாக இருந்தார்கள். கலிலேயாவின் மலைப்பகுதிகளுக்கு அவர்களை அழைத்துச் சென்றார். தன்னுடனான ஐக்கியத்திற்குள் அவர்களை கொண்டுவந்தார். நியாயப்பிரமாணம் அதனுடைய பணியை நிறைவேற்றி முடித்திருந்தது. இப்போது நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தவர் தனிப்பட்ட விதத்தில் வந்திருக்கிறார். தன்னைப் பின்பற்றுவர்களின் குற்ற உணர்வுகளை அகற்றினார். நியாயப்பிரமாணத்தின் கோரிக்கைகளை இயேசு நிறைவேற்றினார். இதனால் இயேசுவைப் பின்பற்றியவர்கள் அவரைத் துதித்தார்கள். இறைவன் நம்முடன் இருக்கிறார். குறைவுள்ளவர்களிடம் பரிபூரணமான ஒருவர் வந்தார். நியாயதிபதி இரட்சகராக மாறினார். அவர் பாவிகளை மீட்கும்படி கீழிறங்கி வந்தார்.


4.13.5 - இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினார்.

மோசேயின் நியாயப்பிரமாணத்தை இயேசு என்ன செய்தார்? ஒருவரும் நிறைவேற்ற இயலாத ஒன்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். அவர் தாழ்மையுடன் மற்றும் மனதிருப்தியுடன் இருந்தார். பணம் தன்னை ஆளுகை செய்யும்படியாக அவர் அனுமதிக்கவில்லை. அவர் எப்போதும் தன்னுடைய பிதாவை மகிமைப்படுத்தினார். 168 முறைகளுக்கும் மேலாக பிதாவின் உன்னதப் பெயரை இயேசு குறிப்பிட்டார். நற்செய்தியில் பிதாவே இயேசுவின் வாழ்வின் முக்கிய மையமாக இருக்கிறார். பிதாவின் அன்பு மற்றும் குமாரனின் அன்பு ஒன்றாக நிலைநிறுத்தப்படுகிறது. இயேசு கூறுகிறார். “நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம். பிதா என்னில் இருக்கிறார். நான் பிதாவில் இருக்கிறேன்”. பிதாவின் அன்பும், பரிசுத்தமும் மனிதனாக வெளிப்பட்ட இயேசுவில் இருக்கின்றன. இயேசு கூறுகிறார். “ என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டவன்”.

சூராமர்யம் 19:32-ல் குரான் குறிப்பிடுவது போல, இயேசு அவருடைய தாயுடன் இருந்த எல்லா நேரங்களிலும், தாயை நேசித்தார் மற்றும் கீழ்ப்படிந்தார்.

இயேசு அவருடைய எதிரிகளை நேசித்தார். அவர்களை அவர் தூற்றவில்லை. அவர்களிடம் சத்தியத்தைப் பேசினார். அவர் தாவீது அல்லது முகம்மதுவைப் போல திருமணம் செய்யவில்லை. அவர் பாவிகளுடனும், வரிவசூலிப்பவர்களுடனும் சாப்பிட்டார். அவர்களை மனந்திரும்புதலுக்கு வழிநடத்தினார். அவர் தனக்கென கோவேறுக் கழுதையை சொந்தமாக பெற்றிருக்கவில்லை. அவர் எருசலேமுக்குள் பிரவேசிப்பதற்கு தனது நண்பனிடம் ஒரு கழுதையை சவாரி செய்வதற்காக தரும்படி இரவலாக கேட்டுக்கொண்டார். அவர் வார்த்தையிலும், செயலிலும் பாவமற்ற, பரிசுத்த வாழ்க்கையை வாழ்ந்தார். பொய், இச்சை, ஆசை அல்லது தீய நோக்கம் எதுவும் இல்லை. இயேசு பரிசுத்தமுள்ளவராக, பரிபூரணமானவராக இருந்தார். அவர் பாவமற்றவராக இருந்தார். தன்னுடைய எதிரிகளை நேசித்தார். எல்லா மனிதர்களையும் நேசித்தார். அவர்களுக்கு சமமாக தன்னை மாற்றிக் கொண்டார். அநேகரை மீட்கும்பொருளாக தன்னுடைய ஜீவனைக் கொடுக்க இருப்பதை அவர் அறிந்திருந்தார். பாவிகளுக்கான அவரது மீட்பின் மரணம் நியாயப்பிரமாணத்தின் இறுதி நிறைவேறுதலைக் குறிக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. (யோவான் 15:13)

எல்லா மக்களுக்காகவும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றும்படி இயேசு பரிசுத்த ஆவியாகிய இறைவனால் பிறந்தார். இறைவனின் பரிபூரண ஆட்டுக்குட்டியாக அவர் மரிக்கும்படி தன்னை ஒப்புக்கொடுத்தார். அவர் பாவத்தை முழுமையாக எடுத்துப்போட்டார். பவுல் கூறுவதைப் போல இயேசு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறார். “விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார். (ரோமர் 10:4). அவருடைய மரணத்தினால் மீட்கப்பட்டவர்களை நியாயப்பிரமாணம் குற்றம் சாட்ட முடியாது. அவர்கள் நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவருடன் நியாயப்பிரமாணத்திற்கு அவர்களும் மரித்துவிட்டார்கள். குமாரன் ஒருவனை விடுதலையாக்கினால், அவன் விடுதலை பெற்றவனாக இருக்கிறான். பரிசுத்தமுள்ள இறைவனின் கோபாக்கினை அவன் மீது விழுவதில்லை. அவரைப் பின்பற்றுவோர் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறார்கள். இறுதிநாளின் பயங்கரமான நியாயத்தீர்ப்பின் போது அவர்கள் குற்றமற்றவர்களாக இருப்பார்கள். கிறிஸ்து தனது ஒரே பலியின் மூலம் தனக்கு சொந்தமான பரிசுத்தமாக்கப்பட்டவர்களை பரிபூரணப்படுத்துகிறார்.

நியாயத்தீர்ப்பு நாளின் போது கிறிஸ்துவை புறக்கணித்தவர்கள், அவர் முன்பாக நிற்பார்கள். மலைகளைப் பார்த்து கூறுவார்கள். “பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;” (வெளி 6:16, லூக்கா 23:30). புறக்கணிக்கும் அனைவரும், நியாயப்பிரமாணத்தின் கீழ் இருக்கும் அனைவரும், இறைவனின் ஆட்டுக்குட்டியானவரால் நியாயம் தீர்க்கப்படுவார்கள். அவர்கள் நியாயப்பிரமாணத்தினால் நியாயம்தீர்க்கப்படுவார்கள்.

முகம்மது தனக்கோ அல்லது தன்னைப் பின்பற்றுவோருக்கோ பரதீசைக் குறித்த நிச்சயத்தை வழங்க முடியவில்லை. அவர் இறைவனின் உக்கிர கோபம் நிறைந்த நியாயத்தீர்ப்பை உணர்ந்திருந்தார். ஒவ்வொரு முஸ்லீமும் நரகத்திற்குள் பிரவேசிக்க வேண்டும். குறிப்பிட்ட காலம் எரிகின்ற அக்கினியில் அவனவன் செய்களுக்கு ஏற்ப இருக்க வேண்டும். (சுரா மர்யம் 19:71). எந்தவொரு முஸ்லீமிற்கும் இரட்சிப்பைக் குறித்த நம்பிக்கை இல்லை. ஏனெனில் அவர்கள் நம்பிக்கை நியாயப்பிரமாணத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. ஒருவரும் அதை முழுமையாக கடைப்பிடிக்க இயலாது. இயேசு கூறுகிறார். குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (யோவான் 3:36)

கிறிஸ்தவர்களைக் குறித்து என்ன? அவர்கள் முஸ்லீம்களை விட சிறந்தவர்களா? இழந்து போன அனைவரையும் விட மேலானவர்களா? கிறிஸ்தவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கையிடுகிறார்கள். அவைகளில் இருந்து மனந்திரும்புகிறார்கள். அவர்கள் இருதயம் நொறுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். தாங்கள் எப்படி இருந்தோம் என்பதை அவர்கள் மறப்பதில்லை. குமாரனாகிய இயேசுவில் சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலம் அவர்களது பெருமை மேற்கொள்ளப்படுகிறது. அவரிடமிருந்து அவர்கள் நித்திய வாழ்வை பெற்றுக்கொள்கிறார்கள்.


4.13.6 - நமக்குள் இருக்கும் கிறிஸ்துவின் பிரமாணம்

ஆண்டவருக்கு ஸ்தோத்திரம். இயேசு, நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றியவர் தன்னுடைய சீஷர்களிடம் இரக்கம் பாராட்டினார். அவர்களது மனங்களில் இறைவனின் நியாயப்பிரமாணத்தை எழுதினார். தன்னுடைய பரிசுத்த ஆவியை அவர்களது இருதயங்களில் தந்தருளினார். அவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக வாழ வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறார்கள். இயேசு சீஷர்களிடம் கூறியதைப் போல ஒரு புதிய பிரமாணத்தை அவர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். நான் உங்களை நேசித்ததைப் போல, நீங்களும் ஒருவரையொருவர் நேசியுங்கள். இதனால் நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று அறியப்படுவீர்கள். இயேசு இந்தக் கட்டளைகளில் பத்துக் கட்டளைகளையும் தொகுத்துள்ளார். ரோமர் 13:10-ல் எழுதுகிறார். அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.

இயேசுவின் ஒப்பற்ற கட்டளையைக் குறித்து சீஷர்கள் பயப்படத் தேவையில்லை. இதை நிறைவேற்ற ஆவிக்குரிய வல்லமையை இயேசு அவர்களுக்கு வழங்குகின்றார். தோரா மேதையாய் இருந்த பவுல் இந்த சத்தியத்தை வெளிப்படுத்துகிறார். கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. (ரோமர் 8:2). இறைவனின் ஆவி இயேசுவைப் பின்பற்றுவோரில் இறைத்தன்மையுள்ள கனிகளை உற்பத்தி செய்கின்றது. அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, சாந்தம் தயவு, விசுவாசம், நற்குணம் மற்றும் இச்சையடக்கம். ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். (கலாத்தியர் 5:22, எபேசியர் 5:9). கிறிஸ்தவர்கள் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை. அவர்கள் சட்டதிட்டங்கள் இல்லாத மக்கள் இல்லை. ஏனெனில் கிறிஸ்துவின் பிரமாணம் அவர்களுக்குள் நிலைத்திருக்கிறது. அதை நிறைவேற்றக் கூடிய வல்லமையையும் தருகின்றது.


4.13.7 - கிறிஸ்து பிரசங்கிக்கப்படுவதை அவர் வலியுறுத்துகிறார்.

கிருபையினால் இரட்சிக்கப்பட்டோரை கிறிஸ்துவின் அன்பு, வழிநடத்துகிறது. அவர்கள் ஒருபோதும் தங்களுக்காக வாழ்கிறதில்லை. எல்லா மனிதர்களுக்கும் கிறிஸ்துவின் நீதியை இலவசமாக வெளிப்படுத்துகிறார்கள். துதி மற்றும் ஆராதனையுடன் இயேசுவைக் குறித்து மற்றவர்களுக்கு சொல்வது நமக்குள் இருக்கும் இயேசுவின் அன்பின் ஒரு வெளிப்பாடு ஆகும். நியாயப்பிரமாணம் மற்றும் நற்செய்தியை முழு உலகிற்கும் பிரசங்கிக்கும்படி அவருடைய சீஷர்கள் சென்றார்கள். நியாயப்பிரமாணம் மனிதனுடைய பாவத் தன்மையை நிரூபிக்கிறது. அவன் நியாயத்தீர்ப்பிற்கு ஏதுவானவன். நம்முடைய இருதயக் கண்களுக்கு முன்பாக நற்செய்தியானது இயேசுவை வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. நியாயப்பிரமாணத்தின் ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து இயேசுவின் கிருபை நம்மை இரட்சிப்பதை நற்செய்தியானது உறுதிப்படுத்துகிறது. இறைநீதியின் கோரிக்கைகளை இயேசு நம்முடைய இடத்தில் இருந்து நிறைவேற்றினார். அவருடைய அளவற்ற இரக்கத்தினால் அவருடைய சொந்த நீதியை நமக்குத் தருகிறார். எனவே நாம் இழந்துபோன சோர்வுற்ற மக்களிடம் போகிறோம். அவர்களுக்கு நித்திய நம்பிக்கை அருளப்படுகிறது. “நாம் முஸ்லீம்கள் மற்றும் யூதர்களை அணுகி, அவர்களை உற்சாகப்படுத்துகிறோம். “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்” (நெகேமியா 8:10) உங்கள் இரட்சிப்பு ஆயத்தமாய் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள், அறிந்துகொள்ளுங்கள். அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு கீழ் வாழ்வோரைப் போல நீங்கள் இருக்கத் தேவையில்லை. கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும் ஒருவன் மீது நரகத்திற்கு எந்த வல்லமையும் இல்லை. இயேசு ஒவ்வொரு சாபம், மற்றும் இறைவனின் கோபாக்கினையை எடுத்துப் போட்டுவிட்டார். ஆண்டவர் நம்முடைய நீதியாய் இருக்கிறார். “அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.” (எரேமியா 23:6) அவரிடம் வாருங்கள் அவரை விசுவாசியுங்கள். அவருடன் ஐக்கியப்படுங்கள். அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட பிரமாணமாய் இருக்கிறார். நம்முடைய எல்லாப் பாவங்களில் இருந்தும் அவருடைய இரத்தம் நம்மை சுத்திகரிக்கிறது. அவருடைய உயிர்ப்பிக்கும் அன்பை நமக்குத் தருகிறார். இறைவனையும், எல்லா மக்களையும் உண்மையுடன் நேசிக்க நமக்கு அவருடைய பெலத்தைத் தருகிறார். “அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறது”. (ரோமர் 13:10)


4.13.8 - வினா

அருமையான வாசகரே,
நீங்கள் இந்தப் புத்தகத்தை கவனமாக வாசித்திருந்தால், கீழ்க்காணும் கேள்விகளுக்கு எளிதில் பதிலளிக்க முடியும். உங்களைப் பாராட்டி எங்களுடைய மற்ற புத்தகங்களை பரிசாக மகிழ்ச்சியுடன் அனுப்பி வைப்போம். உங்களுடைய முழுப்பெயர் மற்றும் தொடர்பு கொள்ள முகவரியை எழுதுங்கள். உங்கள் பதில்களுடன் அதை இணைத்து அனுப்புங்கள்.

  1. வேதாகமக் குறிப்புடன் பத்துக் கட்டளைகளை எழுதுக.
  2. ஏன் கிறிஸ்தவர்கள் பத்துக்கட்டளைகளுக்கு மதிப்புக்கொடுத்து, கீழ்ப்படிய வேண்டும்?
  3. நான் கர்த்தர் என்ற ஆரம்ப வரிகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இறைவனைக் குறித்த மேன்மையான உண்மை என்ன?
  4. அல்லாஹ் மற்றும் ஏலோஹிம் என்பவைகளின் வேறுபட்ட அர்த்தங்கள் என்ன?
  5. அடிமைத் தன வீட்டிலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலரின் புறப்பாட்டில் உள்ள ஆவிக்குரிய முக்கியத்துவம் என்ன?
  6. கிருபையினால் விடுவிக்கப்படுவோருக்கு பத்துக்கட்டளைகள் தடைகளாய் இருக்கிறது. விவரிக்கவும்.
  7. உங்கள் சமுதாயத்தில் உள்ள நவீன விக்கிரகங்களைப் பட்டியலிடுக.
  8. திரியேகத்துவத்தின் ஒற்றுமையைக் குறித்து பழைய ஏற்பாடு என்ன கூறுகிறது?
  9. கிறிஸ்துவின் இறைத்தன்மையை குறித்து குரானின் வசனங்கள் என்ன குறிப்பிடுகிறது?
  10. இயேசுவைப் பின்பற்றுபவர்களிடம் அவரது ரூபம் எப்படி காணப்பட முடியும்?
  11. கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்குதல் என்பதற்கு உதாரணங்களைத் தருக.
  12. எப்படிப்பட்ட வேண்டுதல்கள் கேள்வி கேட்கப்பட வேண்டியவை?
  13. இஸ்ரவேல் மக்களின் மத்தியில் தங்களுடைய பெற்றோரை சபிப்பவர்களுக்கு என்ன தண்டனை உண்டு?
  14. கர்த்தருடைய நாளை கடைப்பிடிப்பதின் மூலம் நாம் என்ன ஆசீர்வாதங்களைப் பெற முடியும்?
  15. கர்த்தருடைய நாளைக் கடைப்பிடிக்க சரியான வழிகள் எவை?
  16. ஏன் கிறிஸ்தவர்கள் வாரத்தின் கடைசி நாளுக்குப் பதிலாக முதல் நாளை ஆராதனை நாளாக வைத்திருக்கிறார்கள்? இந்த மாற்றம் ஏன் சட்டப்பூர்வமானது?
  17. பெற்றோரைக் கனப்படுத்துவதால் ஏற்படும் ஆசீர்வாதங்கள் என்ன?
  18. உங்கள் பெற்றோர்கள் இயேசுவின் நற்செய்திக்கு எதிர்த்து நின்றால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
  19. இந்த உலகத்தில் நிகழ்ந்த முதல் குற்றம் என்ன? அது என்ன விளைவை ஏற்படுத்தியது?
  20. ஆறாம் கட்டளையின் கண்ணோட்டத்தில் ஒரு போர்வீரனின் பொறுப்பு என்ன?
  21. விபசாரப் பாவத்தில் இருந்து ஒருவன் அல்லது ஒருத்தி எவ்விதம் தன்னைக் காத்துக்கொள்ள முடியும்?
  22. புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் திருமண வாழ்வின் ஆசீர்வாதங்களைக் கூறுக.
  23. ஏன் தாவீது “இறைவனே, என்னுள் புதிய இருதயத்தை சிருஷ்டியும்” என்று வேண்டுதல் செய்தான்?
  24. திருட்டின் நவீன வடிவங்கள் இருக்கின்றன. அவைகளைப் பட்டியலிடுக.
  25. ஆதிக்கிறிஸ்தவர்கள் தங்களுடைய பணத்தைக் கொண்டு என்ன செய்தார்கள்?
  26. திருட்டு குற்றத்தை சரிசெய்வதற்கு அப்போஸ்தலனாகிய பவுல் அளித்த தீர்வு என்ன?
  27. யாக்கோபு மூன்று கட்டுமான உதாரணங்களைத் தருகிறார்கள். அவைகள் மனந்திரும்புதலுக்கு நேராக நம்மை நடத்துகிறது. அவைகளைக் குறிப்பிடுக.
  28. இச்சையின் பாவத்தில் இருந்து நாம் எவ்விதம் தப்பிக்க முடியும்?
  29. நாம் எவ்விதம் புதிய இருதயம் மற்றும் புதிய ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியும்?
  30. பத்துக் கட்டளைகளின் தொகுப்பு என்ன?
  31. உங்கள் முழு இருயத்துடன் நீங்கள் எவ்விதம் இறைவனையும், மற்றவர்களையும் உங்களை நேசிப்பது போல் நேசிக்க முடியும்?
  32. நாம் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை. நாம் கிறிஸ்துவின் கிருபையின் கீழ் இருக்கிறோம். ஏன்?

உங்கள் பதில்களை கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்புங்கள்.

Waters of Life
P.O.Box 600 513
70305 Stuttgart
Germany

Internet: www.waters-of-life.net
Internet: www.waters-of-life.org
e-mail: info@waters-of-life.net

www.Grace-and-Truth.net

Page last modified on March 16, 2015, at 02:32 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)