Previous Chapter -- Next Chapter
ஆ) அல்லாஹ்வின் நிலையற்ற தன்மை
குர்ஆன் வெளிப்படுத்துகிறபடி அல்லாஹ் ஒரு நிலையற்ற தன்மையுள்ள கடவுள். அவர் தான் ஏற்கனவே கூறிய காரியங்களைக் கூட மறுத்துரைக்கும் அளவுக்கு மனம் மாறுகிற நிலையற்ற தன்மையுள்ளவர். கிறிஸ்துவைப் பற்றிய குர்ஆனின் கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
- (i) “இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் நான் உயிர்பெற்று எழுப்பப்படும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும் என்றும் கூறியது” (கு 19:33)(ii) “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்” (கு 3:42)(iii) “மர்யமுடைய குமாரர் மஸீஹையும் (மேசியாவையும்) அவருடைய தாயாரையும் இன்னும் பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால் அவனை எதிர்ப்பவர் யார்?” (கு 5:17).
குர்ஆன் எடுத்துரைக்கும் அல்லாஹ் மாறாதவராக இருந்தால், மரியாளையும் இயேசுவையும் ஆசீர்வதிக்கும் நிலையில் எப்போதும் மாறாதவராக இருப்பார். அது உண்மையல்ல என்பதை நாம் குர்ஆன் 5:17-ல் வாசிக்கிறோம். அல்லாஹ் நினைத்தால் இயேசுவையும் மரியாளையும் இவ்வுலகில் உள்ள அனைவரையும் அழித்துவிடுவார். அப்படிப்பட்ட கடவுள் ஒழுக்கம், தர்க்க நியாயம், மீட்பு முதலான எந்த காரியத்திற்காகவும் நம்முடைய அளவு கோலாகக் கொள்ள முடியாத ஒருவராக இருக்கிறார். அவர் தன்னுடைய மனதை மாற்றுகிறாரா இல்லையா என்பதை அறிந்துகொள்ள நமக்கு எந்த வாய்ப்பும் இல்லையே. அவர் நம்முடைய மீட்புக்காக ஏற்படுத்தியிருக்கும் வழியை நாம் எப்படி நம்ப முடியும்? அது மாறிவிட்டால் என்ன செய்வது?
1 கொரிந்தியர் 1:9 –ல் நாம் இப்படி வாசிக்கிறோம்: “தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.” அவர் மாறுகிற கடவுள் அல்ல (மல்கியா 3:6), அவர் பொய் சொல்கிறவர் அல்ல (1 சாமுவேல் 15:29, எபிரெயர் 6:18).
வேதாகம உலக நோக்கில் நாம் என்ன காரணத்திற்காக கடவுளை நம்பலாம் என்று சொல்லப்படுகிறதோ அதே காரணம் அல்லாஹ்விற்கும் பொருந்தும். அல்லாஹ் என்ன சொல்லியிருக்கிறார் என்று ஒரு முஸ்லிம் எதையும் உறுதியாகச் சிந்திக்க முடியாது. ஏனெனில் அல்லாஹ் மாறியிருக்கலாம் அல்லது மாறலாம் அல்லவா? சமாதானத்தினால் ஆசீர்வதிக்கப்பட்ட இயேசுவுக்கும் மரியாளுக்குமே அழிக்கப்படும் அபாயம் இருக்கிறதென்றால் நம்முடைய நிலை என்ன? நாம் இனி பார்க்கப் போகிறபடி முகம்மதுவுக்கே தனக்கு என்ன நடக்கும் என்பது தெரியாதிருந்தது என்று குர்ஆன் சொல்கிறது.