Previous Chapter -- Next Chapter
8. முன்ஊகக் கிறிஸ்தவ காப்புரைக்கான விவிலிய உதாரணங்கள்
அ) பழைய ஏற்பாட்டு உதாரணங்கள்
இந்த வகையான காப்புரை மோதல்களுக்கான (அதாவது, தங்கள் நம்பிக்கைக்குக் காரணம் கூறி நிரூபித்தல்) உதாரணங்களை நாம் வேதாகமத்தில் பார்க்கிறோம். இதற்கான முதலாவது உதாரணத்தை ஆதாமிடம் கடவுள் கேட்ட கேள்வியில் பார்க்கிறோம்: “ஆதாமே நீ எங்கேயிருக்கிறாய்?... நீ நிர்வாணியாய் இருக்கிறாய் என்று உனக்குச் சொன்னது யார்?” (ஆதி. 3:9,11)
ஆதாம் என்ன செய்தார் என்பதையும் எங்கே இருந்தார் என்பதையும் கடவுள் அறிந்திருக்கவில்லையா? நிச்சயமாக அறிந்திருந்தார்! அப்படியானால் ஏன் இந்த கேள்விகளைக் கேட்கிறார்? ஆதாம் தற்போது கடவுளை மீறி நடந்துவிட்டார் என்றும் அதன் விளைவாக கடவுளை விட்டுப் பிரிந்த நிலையில் இருக்கிறார் என்றும் ஆதாமை உணர்த்தும்படியாகவே இந்த கேள்விகளைக் கேட்கிறார்.
காயீனிடமும் கடவுள் இவ்வாறு கேள்வி கேட்பதைப் பார்க்கிறோம் அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: "உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது??” (ஆதி. 4:6-7). மீண்டும் இங்கு கடவுள் தான் பதில் அறிந்த கேள்விகளைக் கேட்கிறார். அவற்றின் மூலமாக தகவல்களைப் பெற்றுக்கொள்வது அவருடைய நோக்கம் அல்ல. தன்னிடத்தில் கேட்கப்பட்ட கேள்விகளை, தன்னைத் தான் ஆய்வு செய்து, ஆதாமுடைய பாவம்தான் இறைவனுடைய கோபத்திற்கும் சோர்வுக்கும் காரணம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தக் கேள்விகளைக் கடவுள் கேட்கிறார்.
இதே போன்ற மிக விவரமான பகுதியை நாம் யோபின் புத்தகத்தில் வாசிக்கிறோம் (அதிகாரங்கள் 38-40). இங்கும் கடவுள் தான் ஏற்கனவே பதில் அறிந்திருக்கும் கேள்விகள் பலவற்றைக் கேட்கிறார், ஆனால், இக்கேள்விகளுக்கான பதில்களைச் சிந்திப்பதால் யோபு கடவுளைக் குறித்த தன்னுடைய முன்ஊகங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதே கடவுளின் நோக்கம் ஆகும். ஆனால், கடவுள் ஆச்சரியமான முறையில் தன்னுடைய கேள்விகளை ஆரம்பிக்கிறார்: “நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.” (யோபு 38:3). கடவுள் இவ்வாறு கேட்பதே யோபின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். ஒரு வகையில் பார்க்கும்போது யோபு தான் கடவுளுடன் பேசுகிறேன் என்பதை அறிந்திருந்தாலும், இன்னொரு வகையில் அவர் கடவுளையே நியாயந்தீர்க்கும் ஓரிடத்தில் இருப்பதாகக் கருதிக்கொண்டிருந்தார். “நீ எனக்கு போதனை செய்” என்று கடவுள் கேட்டபோது, யோபு தன்னுடைய நிலைப்பாட்டின் மூடத்தனத்தை அவர் உணர்ந்திருக்க வேண்டும். கடைசியில் யோபு கடவுளுக்கு பின்வருமாறு பதிலுரைக்கும் வரை அவர் தொடர்ச்சியாகக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்: “இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன். நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.” (யோபு 40:4-5). இறுதியில் யோபு இறுதியான அதிகாரம் யாரிடத்தில் இருக்கிறது என்றும் யார் நீதிபதி என்றும் அறிந்துகொண்டார்.