Previous Chapter -- Next Chapter
ஆ) இயேசு கொள்கைக் காப்புரையைப் பயன்படுத்துதல்
இயேசு கடவுளுடைய வெளிப்பாட்டின் உண்மையை முன் அனுமானித்தே பேசினார். அவை உண்மையானவை என்று அவர் முற்றிலும் ஏற்றுக்கொண்டார், அதைக் குறித்து அவர் ஆய்வு செய்து கொண்டிருக்கவில்லை. அவர் கடவுளுடைய வார்த்தைக்கு கொடுத்திருந்த மதிப்பை ஒரு முறைகூட தள்ளி வைக்கவில்லை. அதற்கு எதிராக இருக்கும் முன்ஊகங்களை அவர் கேள்விகள் கேட்டு சவாலுக்கு உட்படுத்தினார். அதற்கான உதாரணங்கள் இதோ:
1. “அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணுகையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லுவேன். யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்; மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கத்தரிசி என்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி, இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார். (மத். 21:23-27).
இயேசு தம்மைக் குற்றஞ்சாட்டியவர்களை முட்டுச் சந்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டார். அவர்கள் எப்படி பதிலுரைத்தாலும், அவர்கள் மாட்டிக்கொள்வார்கள். அதனால், அவர்கள் பெரும்பாலும் தங்கள் வாய்களை மூடிக்கொண்டு, உண்மையைவிட அறியாமையைத் தெரிந்துகொண்டார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து இவ்வாறு சொன்னார்: “வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?” (மத். 21:42). இந்த இடத்தில் இயேசு தலைமைக் குருக்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும் பேசுகிறார் என்பதைக் கவனியுங்கள் (வ. 23). அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் திருமறையை மக்களுக்குப் போதிப்பதிலும் விளக்குவதிலுமே செலவு செய்யும் மக்கள். “நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?” என்று கேட்பதன் மூலம் இயேசு அவர்களிடத்தில் இருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை, மாறாக மூப்பர்களாகிய அவர்கள் திருமறையை அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் கூறி அவர்களை அவமதிக்கிறார். இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறையின் தலைவராக இருக்கும் நபரைப் பார்த்து பிளேட்டோவை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்பதைப் போன்றது. அவர்கள் தங்கள் துறையைக் குறித்த அறிவே இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதையே இங்கு குறிப்பிடுகிறார். இப்போது அந்த மூப்பர்கள் இதுவரை தாங்கள் புரிந்துகொண்டதைவிட சிறப்பான முறையில் திருமறைக்குப் பொருள் கூறும் ஒருவரைக் கண்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் அவருக்குத் தங்களை ஒப்படைக்கப் போகிறார்களா என்றால் இல்லவே இல்லை. “அவர்கள் இயேசுவைக் கைதுசெய்ய வகை தேடினார்கள்” (வ. 46) என்று நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம். அவர்கள் உண்மையை அறிந்துகொள்வதில் ஆர்வம் அற்றவர்கள். தங்கள் சத்தத்தையே தாங்கள் கேட்க விரும்பி தங்கள் மேன்மையை வலியுறுத்துகிறவர்கள்.
2. மத்தேயு 22-ம் அதிகாரத்திலும் இயேசு இதே முறையைப் பயன்படுத்துகிறார். இங்கே பரிசேயர்களும் சதுசேயர்களும் சீசருக்கு வரி செலுத்துவதைப் பற்றியும், உயிர்த்தெழுந்த பிறகு திருமணத்தின் நிலை குறித்தும், முக்கிய கட்டளை பற்றியும் மேசியா யார் என்பதைப் பற்றியும் கேள்விகள் கேட்டு இயேசுவைச் சிக்கலில் மாட்ட முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதிலளிக்கும்போது இயேசு தத்துவ வாதங்களுக்குப் போய் தன்னுடைய கருத்தை படிப்படியாக நிரூபிக்காமல், கேள்வி கேட்கிறவர்களுடைய முன்ஊகங்களைக் சுட்டிக் காட்டி, அவர்களுடைய திட்டங்கள் முட்டாள்தனமானவை என்று காண்பிக்கிறார். முதலாவது, வரியைப் பற்றி பேசுவதற்கு பரிசேயர்களுக்கு எந்த அருகதையும் இல்லை, ஏனெனில் அவர்கள் யூத பக்தர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டிருந்த அதேவேளையில் சீசருக்கும் விசுவாசமுள்ளவர்களாக நடித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால், இந்த இரண்டும் அவர்களைப் பொருத்தவரை உண்மையில்லை. அவர்கள் உண்மையில் கடவுளுக்குரிய கனத்தை கடவுளுக்கும் கொடுக்கவில்லை, சீசருக்கு அவர்கள் கொடுக்க வேண்டியதை சீசருக்கும் கொடுக்கவில்லை. சதுசேர்களுக்கும் இயேசு இதையே செய்தார். சதுசேயர்கள் தேவாலயத்தைப் பராமரிப்பதற்குப் பொறுப்பாயிருந்து பலி முறைகளைக் கண்காணிக்க வேண்டியவர்கள். அவர்களுக்கு திருமறையைக் குறித்தோ கடவுளின் வல்லமையைக் குறித்தோ எந்த அறிவும் இல்லை என்று சொன்னார். அவர்கள் ஒன்று கடவுள் செத்தவர்களின் கடவுள் என்று சொல்ல வேண்டும் அல்லது “உயிர்த்தெழுதல் இல்லை” என்ற தங்களுடைய நம்பிக்கை தவறானது என்று ஒத்துக்கொள்ள வேண்டும் ஆகிய இரண்டு கசப்பான முடிவுகளில் ஒன்றைத் தெரிவு செய்யும் நிலைக்கு இயேசுவினால் தள்ளப்பட்டார்கள். இயேசு சதுசேயரை வாயடைத்தார் என்பதைக் கண்ட பரிசேயர்கள், மீண்டும் இயேசுவிடம் வந்து மூக்குடைபட்டார்கள். இயேசுவை இலகுவாக வார்த்தையில் சிக்கவைக்க முடியாது என்பதைக் கண்டுகொண்டார்கள். “அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.” (மத்தேயு 22:46). அவர்களுக்கு உண்மையைக் குறித்து அக்கரையில்லை என்பதையும் அதனால் அவர்கள் திரும்பத் திரும்ப அதே தவறைச் செய்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள்.