Previous Chapter -- Next Chapter
ஈ) சொல்வது யார்?
இதற்கு முன்பு நாம் புத்தரைப் பற்றிப் பேசும்போது, பௌத்த மதம் ஒரு இறைமறுப்பு மதமாக இருப்பதால் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் நாம் புத்தருக்குச் செவிகொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். இந்த கேள்வியை நீங்கள் இறைமறுப்பு நம்பிக்கைகளிடம் மட்டும்தான் கேட்க வேண்டும் என்றில்லை. குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கோருகிறது. குர்ஆனுடைய கூற்றுப்படியே அல்லாஹ் இருக்க முடியாது என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். அதேபோல குர்ஆன் தன்னுடைய கூற்றுப்படியே இறுதி அதிகாரமாக இருக்க முடியாது. கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்:
- (i) “(நபியே) நாம் உம்மீது இறக்கியுள்ள வேதத்தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக. நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய வேதம் வந்துள்ளது – எனவே, சந்தேகம் கொள்பவர்களில் நீர் திண்ணமாக ஆகிவிட வேண்டாம்.” (கு 10:94)(ii) ““இன்னும் நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள வேதத்தில் நீங்கள் சந்தேகம் உடையராக இருப்பீர்களானால், உண்மையாளராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உதவியாளர்களை அழைத்து இதுபோன்ற ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்” (கு 2:23)(iii) “இந்த குர்ஆனைப் போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து, அவர்களில் சிலர் சிலருக்கு உதவி புரிபவராக இருந்தாலும் இதுபோன்ற ஒன்றை அவர்களால் கொண்டுவர முடியாது ” (கு 17:88)
குர்ஆனே தன்னை இறுதி அதிகாரமாகப் பார்க்கவில்லை என்பதை இந்த மூன்று வசனங்களும் காண்பிக்கின்றன. முகம்மதுவுக்கு குர்ஆனில் சந்தேகம் ஏற்பட்டால் அவர் கிறிஸ்தவர்களிடத்திலும் யூதர்களிடத்திலும் சென்று கேட்க வேண்டும் என்று கூறுவதன் மூலம் முதல் வசனம் அவர்களை இறுதி அதிகாரமுடையவர்களாக ஆக்குகிறது. அவர்கள் குர்ஆனை ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதல்ல கேள்வி. அவர்கள் இறுதி தீர்ப்பளிக்கும் நீதிபதிகளாக அல்லாஹ்வினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையே நான் குறிப்பிட்டுக் காண்பிக்க விரும்புகிறேன். இந்த இடத்தில் கிறிஸ்து தம்முடைய வார்த்தைகளைப் புறக்கணிப்பவர்களுக்கு என்ன சொல்கிறார் என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள். எங்காவது சென்று யாரிடமாவது கேளுங்கள் என்று சொல்லவில்லை, மாறாக இப்படிச் சொன்னார்: “என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.” (யோவான் 12:48).
மற்ற இரண்டு வசனங்களும் இதே காரியத்தைத்தான் செய்கின்றன. இரண்டாவது வசனம் மனிதர்களிடத்திலும் மூன்றாவது வசனம் மனிதர்களிடத்திலும் ஜின்களிடத்திலும் (பிசாசுகளுக்கு இணையான ஆன்மீக உயிரினங்கள்) ஒரு சவாலை முன்வைக்கின்றன. இங்கும் அந்த சவால் ஏற்கப்பட்டதா இல்லையா என்பதல்ல என் வாதம். குர்ஆனைப் போன்ற ஒன்றை யாரும் இதுவரை கொண்டுவராத காரணத்தினால் நாம் குர்ஆனை நம்ப வேணடும் என்று குர்ஆன் கோருகிறது. இறுதி அதிகாரத்தை இந்த வசனங்கள் மொழியியல் ரீதியான அழகுப் பொருளாக மாற்றுகின்றன. அதைவிட மோசமான காரியம் என்னவென்றால் அது எப்படி இருக்கிறது அல்லது எப்படி இல்லை என்று நியாயம்தீர்க்கிறவர்கள்தான் இங்கு இறுதி அதிகாரமாக முன்வைக்கப்படுகிறார்கள்.