Previous Chapter -- Next Chapter
14.2. திருமணம்
இஸ்லாமிய மதம் பெரும்பான்மையாக உள்ள நாட்டில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஆணிடம் புதிய குடும்பம் துவக்குவது மிகவும் கடினமாக இருக்கும் ; பெண்ணாக இருந்தால் அது முடியாத காரியம். இஸ்லாமிய மதம் பெரும்பான்மையாக உள்ள பல நாடுகளில் பிறக்கும்போதே அனைவரின் மதமும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படுகிறது. ஒருவர் பிறக்கும்போது இஸ்லாமியர் என பதிவு செய்யப்பட்டால், பின்னர் அவர் தனது மதத்தை மாற்ற முடியாது. இஸ்லாமியக் கொள்கைகளின்படி (மற்றும் பெரும்பாலான இஸ்லாமிய ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் சட்டங்களின்படி), ஒரு இஸ்லாமிய ஆண் கிறிஸ்தவ அல்லது யூத மதத்தைச் சேர்ந்த கற்புள்ள பெண்ணை மணந்துகொள்ள அனுமதிக்கப்படுகிறது; ஆனால், ஒரு இஸ்லாமியப் பெண் இஸ்லாமிய ஆணையே மணந்துகொள்ள முடியும். எனவே, கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர் ஆவணங்களில் இஸ்லாமியராக இருந்தால், அந்த ஆண் கிறிஸ்தவ பெண்ணை மணமுடிக்க முடியும்; இருப்பினும், அவரது அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் அவர் இஸ்லாமியர் என்றுதான் இருக்கும், அவருக்கு குழந்தைகள் இருந்தால் அவர்கள் இஸ்லாமியர்களாக பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும். பெண்ணிற்கு இந்த வாய்ப்பு கூட இல்லை. மேலும், குடும்பத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய ஆணுடனான திருமணத்தை மறுப்பதற்கும் முடியாமல் போகலாம், இதனால் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வது அந்தப் பெண்ணுக்குக் கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
சில சபைகள் மதம் மாறிய தம்பதிகளை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்துவதன் மூலம் திருமணம் செய்து வைப்பதன் மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கின்றன. இது ஒரு நல்ல தீர்வைப் போல் தோன்றலாம் - பல சந்தர்ப்பங்களில் அதுவே சிறந்த தீர்வுதான் - என்றாலும், இதிலும் சில சவால்கள் உள்ளன. இந்தப் புதிய குடும்பம் எந்தவிதமான பாரம்பரிய கலாச்சார அல்லது மத அடையாளமும் இல்லாமல் வாழ்க்கையைத் தொடங்க வேண்டியிருக்கும். ஏனென்றால், அவர்கள் தங்களின் இஸ்லாமிய கலாச்சாரத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள், அதே நேரத்தில் அவர்கள் தற்போது சேர்ந்திருக்கும் புதிய மரபுகளுக்கும் அவர்கள் புதியவர்களாக இருக்கிறார்கள். இந்தப் புதிய குடும்பத்தினர் தங்களுக்கென்று ஒரு புதியக் கலாச்சாரத்தையும் மரபுகளையும் உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கும். இவர்களுடைய குடும்பத்தின் எந்தவிதமான ஆதரவும் இல்லாமலேயே புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டியிருக்கும். இவற்றையெல்லாம் சபை புரிந்துகொண்டு, இவர்களை இணக்கமாக ஏற்றுக் கொண்டு, தேவைப்படும் காரியங்களில் ஆதரவு வழங்க வேண்டும்.
சில சமயங்களில், சபை கலாச்சாரத்தின் மிகுந்த மகிழ்ச்சியான நிகழ்வுகள் மதம் மாறியவர்களுக்கு எதிர்மறையான உணர்வுகளைத் தூண்டிவிடக் கூடும். கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற பண்டிகைகள், சபை மற்றும் குடும்பத்தினர் ஒன்று கூடி கொண்டாடும் நேரங்கள், மதம் மாறியவர்கள் தங்களுக்கு கொண்டாட குடும்பம் இல்லை என்று நினைத்துக்கொள்ளும் நேரங்களாக இருக்கலாம் (இது நிச்சயமாக மதம் மாறி தனிமையில் இருக்கும் தனிநபருக்கும் சம அளவிலோ அல்லது அதை விட அதிகமாக இருக்கலாம்).