Previous Chapter -- Next Chapter
1.5. மெக்கா
கி.பி 570 ஆண்டு - துல்லியமான தேதி குறித்து உடன்பாடு இல்லை - முகம்மது நபி, ஜெத்தா (Jeddah) என்ற செங்கடல் துறைமுகத்திலிருந்து கிழக்கே சுமார் 50 கிமீ தொலைவில், 85 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சிறிய ஆனால் செழிப்பான மெக்காவில் பிறந்தார். கிடைத்த தகவல்களின்படி, அந்த காலகட்டத்தைப் பற்றிய எந்த குறிப்பும் உண்மையில் இல்லாவிடினும், பிற்கால இஸ்லாமிய ஆதாரங்களின்படி, மெக்கா தெற்கு மற்றும் வடக்கு அரேபியா இடையே மிக முக்கியமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்தது. இது அரேபிய தீபகற்பத்தின் தென்பகுதிகளிலிருந்து எருசலேம் மற்றும் பாரசீகத்திற்கான வர்த்தக வழித்தடத்தைக் கட்டுப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களின் தகவலின்படி, பயணம்செய்யும் பாரசீக வணிகர்களின் குழுக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அரேபிய ஆட்சியாளர்கள் பாரசீக வணிகர்களிடம் கப்பம் வசூலித்தனர். அந்த நேரத்தில் குறைஷி பழங்குடி ஆட்சி செய்து வந்தது; முகம்மது குறைஷி பழங்குடியின் ஒரு கிளையான ஹஷிம் குடும்பத்தில் பிறந்தார்.
அரேபிய தீபகற்பம் முழுவதும் உள்ள பூர்வ கால மதத்தினருக்கு மெக்கா ஒரு முக்கிய வழிபாட்டு தளமாக இருந்தது. ஆண்டின் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு தெய்வங்களை வழிபடும் பல்வேறு சமூகத்தினர் யாத்திரை செல்லும் இடமாகவும் இது விளங்கியது. தங்களின் முந்தைய தவறுகளை போக்கிக்கொள்வதற்காக ஆண்டுதோறும் மெக்காவுக்கு யாத்திரை செல்லும் வழக்கம் அரேபியரிடம் இருந்தது (இஸ்லாம் இந்த பழக்கத்தை ஏற்றுக்கொண்டாலும், இது ஆபிரகாம் காலத்திலிருந்து வந்தது என இஸ்லாம் வாதிடுகிறது). இந்த யாத்திரைகளின் மையமாக காபா இருந்தது. கருப்பு கல்லைக் கொண்ட இந்த கூம்பு வடிவிலான கட்டடம், புனித தலமாகவும் வழிபாட்டுத் தலமாகவும் விளங்கியது. அரேபியா முழுவதும் பல கூம்பு வடிவிலான ஸ்தலங்கள் இருந்த போதிலும், மெக்காவிலுள்ள காபா தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது மற்றும் மிகவும் பழமையானது, அது முகம்மது பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே இருந்தது. மெக்காவிலுள்ள காபா மிகுந்த புனிதத்துடன் பார்க்கப்பட்டது. மிக அவசியமான சந்தர்ப்பங்களைத் தவிர அதன் மீது ஏறுவது கூடாது, அப்போதும் சுதந்தர மனிதர்களுக்கு மட்டுமே அனுமதி. அடிமை ஒருவர் காபா மீது ஏறுவது அவசியம் என்றால், அவரை முதலில் விடுதலை செய்ய வேண்டும். காபாவின் துல்லிய வரலாறு தெரியவில்லை, ஆனால் அது ஆரம்பத்தில் சிலை வழிபாட்டுத் தலமாக இருந்திருக்கலாம் என்ற கருத்து இருக்கிறது. இந்தக் கருத்து, தற்போது தெற்கு ஜோர்டானில் உள்ள பாகன் மக்கள் மழை, வெற்றி போன்றவற்றிற்காக கல் சிலைகளை வணங்குவதைப் பார்த்து ஈர்க்கப்பட்ட ஒரு பணக்கார அரேபியர், அத்தகைய சிலையை மெக்காவுக்குக் கொண்டு வந்து காபாவில் சிலை வழிபாட்டைத் தொடங்கினார் என்பதைக் கூறுகிறது. அவர்கள் அவருக்கு ஹுபால் என்ற பெயரில் ஒரு சிலையைக் கொடுத்தார்கள் - அது சிவப்பு கல்லால் செய்யப்பட்ட மனித வடிவிலான சிலை, ஒரு கை உடைந்திருந்தது. கதை, அவர் ஹுபால் சிலையை தனது குலத்தினர் வழிபாடு செய்வதற்காக காபாவிற்கு முன்பாக வைத்தார் என்று கூறுகிறது. காலப்போக்கில், பிற குழுக்கள் தங்கள் சொந்த சிலைகளைச் சேர்த்தன, இதன் விளைவாக, முகம்மது பிறந்த சமயத்தில், காபாவில் 300க்கும் மேற்பட்ட சிலைகள் இருந்தன.
இஸ்லாமிய மதம் தோன்றுவதற்கு முன்னர் மெக்கா ஒரு புனித யாத்திரை தலமாக இருந்தது. அங்கு செல்பவர்களில் பக்தர்களும் சிலை வணங்குபவர்களும் மட்டுமல்லாமல், யூதர்களும் கிறிஸ்தவர்களும் இருந்தனர். உண்மையில், கிறிஸ்தவ தலைவராகவும், பின்னர் முகம்மது நபியின் தோழர்களில் ஒருவராகவும் இருந்த அலி இப்னு ஹாதம் எழுதிய கவிதையின் மூலம், மெக்கா நகரம் கிறிஸ்தவர்களால் எந்த அளவு மதிக்கப்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த கவிதையில், அவர் நெஸ்டோரிய கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்த தலைவரை கண்டித்தார்:
நான் மெக்கா மற்றும் சிலுவையின் இறைவன் மீது சத்தியம் செய்கிறேன்.”
இது கொஞ்சம் விசித்திரமாகத் தோன்றலாம்: கிறிஸ்தவ கவிஞர் ஒரு கிறிஸ்தவ தலைவருக்கு மெக்காவைக் கொண்டு சத்தியம் செய்வது. மெக்காவைக் கைப்பற்றிய பிறகு, முகம்மது நபி காபாவையும் அதனைச் சுற்றிலுமிருந்த அனைத்து படங்களையும் சிலைகளையும் அகற்றுமாறு கட்டளையிட்டார், ஆனால் ஒரு படத்தின் மீது கையை வைத்து, தனது உள்ளங்கைக்குக் கீழ் இருப்பதைத் தவிர அனைத்தையும் அகற்றுமாறு கட்டளையிட்டார்; அவர் கையைத் தூக்கியபோது, அது இயேசு மற்றும் மரியாளின் படமாக இருந்தது. எனவே மெக்கா கிறிஸ்தவர்களுக்கும் வழிபாட்டுத் தலமாக இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.
மெக்காவில் நெஸ்டோரியன் கிறிஸ்தவர்களின் பெரும் சமூகம் இருந்தது என்பது உண்மை. அவர்கள் மதபேதவாதிகள். இவர்கள் ரோமானிய துன்புறுத்தல்களில் இருந்து தப்பி ஓடிவந்தவர்கள், அல்லது லத்தீன் கத்தோலிக்க அல்லது கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைகளால் சபையிலிருந்து நீக்கப்பட்டவர்கள். மெக்கா ரோமானிய, கான்ஸ்டான்டைன்நோபுள் அல்லது பாரசீக பேரரசுகளின் ஆட்சிக்குட்படாத பகுதியாக இருந்ததால், இவற்றில் ஏதாவதொன்றின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு அது பாதுகாப்பான இடமாக இருந்தது. மெக்காவிலுள்ள மலை அருகே கூடிவந்த இந்த கிறிஸ்தவர்கள், "அஹாபீஷ்" என்ற சமூகத்தை உருவாக்கிக் கொண்டனர். இந்தப் பெயர் அவர்கள் கூடிவந்த மலையின் பெயராகும். சில கிறிஸ்தவ அடிமைகளும் இருந்தனர்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், முகம்மது நபியின் பிறப்பின் போது, பொதுவாக அரேபிய தீபகற்பத்திலும் மெக்காவிலும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். புறஜாதியினர், கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் பிற மார்க்க பேதமுள்ளவர்கள் என பல மதத்தினர் வினோதமான முறையில் கலந்து வாழ்ந்தனர். மேற்கூறிய ஒவ்வொரு மதத்தினரும், தங்களுடைய நம்பிக்கைகளின்படி, மெக்கா மற்றும் காபாவிற்கு பல்வேறு காரணங்களுக்காக மரியாதை கொடுத்தனர். உதாரணமாக, யூதர்கள் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், வெளிப்படையாக அரேபியர்களைப் பிரியப்படுத்துவதற்காகவும், காபாவிற்கு மரியாதை காட்டுவார்கள். இவ்வாறு பல்வேறு மதத்தினர் கலந்து வாழ்ந்த சூழல், ஒரே கடவுள் கொள்கையோடு தன்னை தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொண்டு வருபவரை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தது. யூதர்கள் மேசியாவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர், கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்; இந்த எதிர்பார்ப்பு பரவி, மற்ற மத சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அத்தகைய ஒரே தேவன் கொள்கையுடைய தீர்க்கதரிசி அன்றைய மத மையமான மெக்காவிலிருந்து வருவது முற்றிலும் தர்க்கபூர்வமானதாக தோன்றியிருக்கும். இப்படிப்பட்ட சூழலில் தான் முகமது பிறந்தார்.