Previous Chapter -- Next Chapter
அத்தியாயம் 4: இஸ்லாத்தின் தூண்கள்
இஸ்லாமிய நம்பிக்கையின் ஆறு அடிப்படைக் கொள்கைகளுக்கு அடுத்தபடியாக, முஸ்லீம்கள் இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் என்று அழைக்கப்படுவதை நம்புகிறார்கள். இவை புகாரி மற்றும் முஸ்லீம் தொகுப்புகளில் காணப்படும் ஹதீஸ்களில் வரையறுக்கப்பட்ட சில விதிவிலக்குகளைத் தவிர அனைத்து முஸ்லீம்களும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் ஆகும், மேலும் இவை பெரும்பாலான சுன்னி முஸ்லீம்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவை: ஷஹாதா (விசுவாச பிரகடனம்), சாலத் (சடங்குரீதியான தொழுகை), சான் (நோன்பு), ஜக்காத் (தர்மம்) மற்றும் ஹஜ் (புனித யாத்திரை) ஆகியவை. சில சுன்னி மூலங்கள் ஜிஹாத்தை (போராட்டம்) ஆறாவது தூணாகக் கருதுகின்றன; பிற மூலங்கள் ஹஜ்ஜுக்குப் பதிலாக ஜிஹாத்தை ஐந்தாவது தூணாகக் கணக்கிடுகின்றன. குர்ஆனில் இந்தத் தூண்கள் குறிப்பிடப்படவில்லை என்பதையும், ஷியா முஸ்லீம்களுக்கு முற்றிலும் வேறுபட்ட பட்டியல் இருப்பதையும் கவனிக்க வேண்டும். சுன்னி முஸ்லீம் அறிஞர்களைப் பொறுத்தவரையில், முஸ்லீம் என்று கூறிக்கொள்பவராகவோ அல்லது முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்தவராகவோ இருந்தும் இந்த நம்பிக்கைகளில் ஏதாவதொன்றை நம்பாதவர் முஸ்லீம் அல்ல, மாறாக விசுவாசத் துரோகி என்று கருதப்பட வேண்டும். சில அறிஞர்கள் இத்தகைய நபர் கொல்லப்பட வேண்டும் என்று நம்பினாலும், வேறு சிலர் இது மரண தண்டனைக்குரிய குற்றம் அல்ல என்று கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.