Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 09. Comparisons -- 4.03 First Commandment: You Shall Have no Other Gods Before Me
This page in: -- Afrikaans -- Arabic? -- Armenian? -- Azeri? -- Bulgarian? -- Cebuano? -- Chinese -- English -- Farsi? -- French -- German -- Gujarati? -- Hebrew -- Indonesian -- Norwegian? -- Polish? -- Russian -- Serbian? -- Spanish? -- TAMIL -- Turkish? -- Uzbek -- Yiddish? -- Yoruba

Previous part -- Next part

09. இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் – ஒப்பாய்வு
Comparisosns 4 - பத்து கட்டளைகள்

4.03 - முதலாவது கட்டளை: வேறு தெய்வங்கள் இல்லை



யாத்திராகமம் 20:3
“என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்”
(யாத்திராகமம் 20:3).


4.03.1 - இன்றைய சிலைவழிபாடு

நாம் தொழில் நகரங்களில் வாழ்ந்தால் மரத்தினாலோ, கல்லினாலோ அல்லது தங்கத்தினாலோ செய்யப்பட்ட சிலைகளை வணங்கும் மக்களைப் பார்ப்பது அரிது. ஆயினும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவுக்கு நீங்கள் சென்றால் பயத்தோடு பல்வேறு சிலைகளை வழிபடுகிற மக்களை நீங்கள் காணலாம்.

“இந்தியன் ஏர்லைன்” விமானத்தின் பத்திரிகை ஒன்றில் தன்னுடைய எதிரிகளைக் கொலைசெய்யும் ஏழு கைகளையுடைய யுத்தத்தின் தேவதையாகிய துர்காவின் படம் இருந்தது. மனிதனுடைய மண்டையோடு அந்த துர்காவின் உடலெங்கும் தொங்கிக்கொண்டிருந்தது. தீவிரமான யுத்த வீராங்கனையாகிய அந்த தெய்வத்தை நெருங்குகிற யாரும் அவளுடைய வாயிலிருந்து புறப்பட்டு வருகிற நெருப்பினால் எரித்துக்கொல்லப்படுவார்கள். அவள் தன்னுடைய எதிரிகளைச் சிரித்த முகத்துடன் கொல்லுகிறாள்.

கணபதி என்ற தெய்வத்தைக் குறிக்கும் யானைகளின் வடிக்கப்பட்ட சிலைகளை இந்தியாவில் நீங்கள் காணலாம். அவ்வப்போது இந்துக்கள் அந்த சிலைகளுக்கு முன்பாக நறுமணமுள்ள மலர்களைத் தூவுவார்கள். சிறப்பு விழாக்காலங்களில் இரண்டு அல்லது மூன்று மாடிக் கட்டிட உயரமுள்ள பிளாஸ்டிக் யானைகளை மலர் மாலைகளைக் கொண்டு அலங்கரிப்பார்கள். பெருந்திரளான மக்கள் இந்த சிலைகளை ஊர்வலமாகச் சுமந்து சென்று ஆறுகளில் அல்லது கடலில் தள்ளிவிடுவார்கள். நல்ல மீன்பிடித் தொழில் நடைபெற வேண்டும் என்று அல்லது வருடாந்தர வெள்ளப் பெருக்கிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியை அவர்கள் செய்கிறார்கள்.

சிறப்பு விழாக் காலங்களில் ஆயிரக்கணக்கான பசுக்கள் கோவில்களுக்குள் ஓட்டிவிடப்பட்டு, அவை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று அவற்றின் மீது தண்ணீர் தெளிக்கப்படுகிறது. அதன் பிறகு அவை கோவிலுக்கு நேர்ந்துவிடப்பட்டவை என்பதற்கு அடையாளமாக அவற்றின் கொம்புகளில் பல வர்ணங்கள் பூசப்படுகின்றன.

இமயமலைக்கு அப்பால் உள்ள லடாக் பள்ளத்தாக்கிற்கு அல்லது பௌத்த நாடுகளுக்கு நீங்கள் பயணம் செய்வீர்களானால் புன்னகையுடன் இருக்கும் பெரிய பெரிய புத்தர் சிலைகளை மக்கள் மிகுந்த மரியாதையுடன் விழுந்து வணங்கிக் கொண்டிருப்பார்கள். இவ்வுலகத்தின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இன்னும் சிலைகளை வணங்குவதால் முதலாம் கட்டளையை மீறுகிறார்கள். சிலைகளை வழிபடும் இந்த மக்கள் அவை சக்தியுள்ளவை என்றும் பிறவிச் சுழற்சி இருக்கிறது என்றும் நம்புகிறார்கள். இப்படிப்பட்ட பழக்கங்களில் ஆப்பிரிக்காவிலும் இந்தோனேசியாவிலும் பெருந்திரளான மக்கள் ஆவிக்குரிய அடிமைத்தனத்தில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இயேசுவின் அதிகாரத்தை அனுபவிப்பார்கள் என்றால், ஆவிகளைக் குறித்த எல்லாவித பயங்களில் இருந்தும், சிலைவழிபாட்டிலிருந்தும், பில்லி சூனியத்திலிருந்தும் விடுவிக்கப்படுவார்கள். அதன் பிறகு அவர்கள் மாந்தீரகத்தையோ நீலப் பாசிகளையோ நாட மாட்டார்கள். அவர்கள் தீய ஆவிகளுடைய அனைத்துவித பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்கப்படுவதால் உயிரற்ற சிலைகளைப் புறக்கணித்து விடுவார்கள்.

நம்முடைய பரலோக தகப்பன் அனைத்துவித பயங்களிலிருந்தும் நம்மை விடுவிக்கிறார். சிறு தெய்வங்களுடைய ஆளுகையிலிருந்தும் அவர் நம்மை விடுவித்து, அனைத்துவித மாந்தீரகத்தின் சக்திகளிலிருந்தும் நம்மை விலக்கிக் காக்கிறார். இறைவனுடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தமே அனைத்துவித தீய சக்திகளிலிருந்து நம்மை முழுமையாகப் பாதுகாக்கிறது. கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்கு எதிராக இருளின் சக்திகளுடைய பெயர்களினால் எழுதப்பட்ட அல்லது சொல்லப்பட்ட அனைத்து சாபங்களும் கர்த்தருடைய நாமத்தினால் நிர்மூலமாக்கப்படும். அவரிடத்தில் திரும்புகிற அனைவருக்கும் அவர் பெலமுள்ள கோட்டையாக இருந்து அவர்களைப் பாதுகாக்கிறார்.


4.03.2 - நவீன கால சிலைகள்

ஒரு புதிய வகையான சிலை வழிபாடு தொழிற்சாலை மயமாக்கப்பட்ட நாடுகளில் நடைபெறுகிறது. இதில் சிலைகளுக்குப் பதிலாக கார்களும், தொலைக்காட்சிப் பெட்டிகளும், நட்சத்திர மனிதர்களும் வணக்கத்துக்குள்ளாகின்றனர். உயிருள்ள இறைவனை விட நவீன தொழில் நுட்பத்தை மனிதர்கள் நம்புகிறார்கள். கார்களில் ஏறிக்கொள்ளும் மனிதர்கள் வழுவழுப்பான சாலைகளில் மின்னல் வேகத்தில் பறக்கிறார்கள். நவீன கால மனிதர்களுக்கு கார்கள் சிலைகளாக மாறிவிட்டன. அவர்கள் அதற்குள் நுழைந்து அதன் சக்திக்கு தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள். இஸ்ரவேல் மக்கள் பொற்கன்றுக்குட்டியைச் சுற்றி நடனமாடினார்கள். தற்கால மக்கள் புத்தம் புதிய வகைக் கார்களைச் சுற்றி நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு காரை வாங்குவதற்கு தியாகத்தோடு பணத்தைச் சேகரிக்கிறார்கள். அதைச் சுத்தப்படுத்தி, பளபளக்கச் செய்து, தங்களைச் சுற்றியிருக்கிற மக்களுடைய சத்தத்தைக் காட்டிலும் கவனமாக அந்தக் காரின் இயந்திரம் எழுப்பும் “ஹம்” ஒலியைக் கேட்கிறார்கள்.

பணத்தை நேசிப்பதற்கு எதிராக இயேசு சிறப்பான எச்சரிக்கை கொடுக்கிறார். “பணத்திற்கும் இறைவனுக்கும் ஒருவனால் ஒரே நேரத்தில் சேவை செய்ய முடியாது. ஒன்றை நேசித்து மற்றதை வெறுக்க வேண்டும். அல்லது இறைவனைப் புறக்கணித்துவிட்டு பணத்தைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்” என்று கூறினார். “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது”. சோசலிசவாதமும் முதலாளித்துவமும் ஒரே நோக்கத்தைக் கொண்டே செயல்படுகின்றன. முதலாளிகள் ஏற்கனவே பணக்காரர்களாக இருக்கிறார்கள். சோசலிசவாதிகளோ ஏமாற்றுதலினாலும் தீவிரவாதத்தினாலும் பணக்காரராக நினைக்கிறார்கள். இன்றும் மக்கள் தங்க கன்றுக் குட்டியைச் சுற்றி நடனமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வஞ்சிக்கடாதிருங்கள், இறைவனை நாம் கேலிசெய்ய அவர் விடமாட்டார். யாரும் பணத்திற்கும் இறைவனுக்கும் சேவை செய்ய முடியாது. இயேசு ஏழையாக இருந்தாலும் திருப்தியுள்ளவராக இருந்தார். அவர் தம்முடைய சீஷர்களுக்கு பணத்தைக் குறித்து கடுமையான எச்சரிக்கையைக் கொடுத்தார். “பணக்காரராக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும் விழுகிறார்கள்” (1 தீமோத்தேயு 6:9 மற்றும் மத்தேயு 6:24; 19:24).

ஆயினும் அனைத்து கலாச்சாரங்களிலும் மதங்களிலும் ஆளுகை செய்யும் எல்லாவற்றிற்கும் மேலான சிலை நம்முடைய சுயம் என்னும் சிலைதான். ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தான் சிறந்த மனிதனாகவும், உலகத்திலேயே அழகானவனாகவும், மிகவும் முக்கியமானவனாகவும் கருதிக்கொள்கிறான். ஒவ்வொரு மனிதனும் அவன்தான் இவ்வுலகத்தின் மையம் என்று கருதிக்கொள்கிறான். ஒரு மூன்று வயதுக் குழந்தையிடம் “நீ என்னவாக விரும்புகிறாய்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அந்தப் பிள்ளை “நான் சிலையாக விரும்புகிறேன்” என்றதாம். “ஏன்?” என்று கேட்டதற்கு, “அப்பொழுதுதான் எல்லாரும் என்னைப் பார்ப்பார்கள்” என்றதாம். பெருமையும் சுயநலமும் நம்முடைய இரத்தத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இது தாழ்மையுள்ள கிறிஸ்துவின் ஆவிக்கு முற்றிலும் எதிரானது. “தேவனால் மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் வருகிற மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?” என்று இயேசு கேட்டார். “நான் சந்தமும் மனத் தாழ்மையுமாயிருக்கிறேன். என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இழைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது” என்றும் அவர் சொன்னார். “தன்னுடைய வாழ்வைக் காத்துக்கொள்ள நினைக்கிறவன் அதை இழந்துவிடுவான். என்னிமித்தம் தன் வாழ்வை இழக்கிறவன் அதைப் பெற்றுக்கொள்வான்.” “உனக்கு நீ பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே.” (யோவான் 5:44; மத்தேயு 11:29-30; 16:25-26; எரேமியா 45:5).


4.03.3 - சிலைவழிபாட்டை வெற்றிபெறுதல்

இறைவனைத் தவிர வேறு தெய்வங்களை வணங்கக் கூடாது என்பது ஏன் முதலாவது கட்டளையாக இருக்கிறது? உண்மையில் ஒரே இறைவன் மட்டும்தான் இருக்கிறார். இவ்வுலகத்தில் மனிதர்களால் கொண்டாடப்படுகிற நட்சத்திர மனிதர்கள் அனைவரும் தற்காலிகமானவர்களே. இறைவன் மட்டுமே என்றும் உயிரோடு இருக்கிறவர். அவரே நம்மைப் படைத்தவர், ஆதலால் அவருக்கே கனமும் மகிமையும் உண்டாகட்டும். அவரே அண்டத்தின் மையமாக இருக்கிறார். நாம் மனந்திரும்பி, மன மகிழ்ச்சியோடு இறைவனுக்குச் சேவை செய்யும்படி அனுதினமும் நம்முடைய சுயநலம் உடைக்கப்பட வேண்டும். நம்முடைய வாழ்வை நாம் இறைவனுடைய கரங்களில் ஒப்படைக்க வேண்டும். நம்முடைய வங்கிக் கையிருப்போ, நமது உடல் ஆரோக்கியமோ, நம்முடைய திறமைகளோ நமது வாழ்வின் ஆதாரங்களாக இருக்கக்கூடாது.

தன்னுடைய சட்டப்படியான புதல்வனும் நீண்ட காலம் எதிர்பார்த்த சொந்த சந்ததியுமாகிய ஈசாக்கை ஆபிரகாம் நேசித்தார். ஆபிரகாமுடைய சிந்தை முழுவதும் ஈசாக்கே நிறைந்திருந்த காரணத்தினால் ஈசாக்கு இறைவனைக் காட்டிலும் முக்கியமானவராகத் தோன்றினார். அப்போது கர்த்தர் தன்னுடைய வேலைக்காரனைச் சோதித்தார். அவர் தன்னுடைய பிரியமான மகனை தகன பலியாகக் கொடுக்க வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டார். செய்யவே முடியாதது போல தோன்றிய காரியத்தைச் செய்ய ஆபிரகாம் சித்தம் கொண்டு, தன்னுடைய மகனையே பலி செலுத்தி இறைவனுக்கு மட்டுமே மகிமையைச் செலுத்த ஆயத்தமானார். இறுதித் தருணத்தில் ஆபிரகாம் தன்னுடைய வாக்குத்தத்தத்தின் மகனைக் கொலை செய்யாதபடி இறைவன் தடுத்து அவனுக்குப் பதிலாக ஒரு ஆட்டைக் காண்பித்தார். இறுதியாக ஆபிரகாம் தன்னுடைய மகனை விட்டுப் பிரிக்கப்பட ஆயத்தமாயிருந்தபோது அவருக்கிருந்த உள்ளான போராட்டத்தில் இறைவனே மகிமைப்பட்டார். அவர் தன்னுடைய மகனைவிட இறைவனையே அதிகமாக நேசித்தார்.

நமக்கும் இறைவனுக்கும் இடையில் ஏதேனும் பெரிய சிலையோ அல்லது சிறிய சிலையோ நிற்கிறதா என்பதை நாம் அவ்வப்போது பரீட்சித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த நிலைகள் நம்முடைய புத்தகங்களாகவோ, நகைகளாகவோ, படங்களாகவோ, நினைவுகளாகவோ, பொழுதுபோக்குகளாகவோ, பழக்கங்களாகவோ, வீடுகளாகவோ, வேறு ஏதாவது காரியமாகவோ இருக்கலாம். சில மனிதர்கள் கூட நம்முடைய இருதயத்தைச் சிறைப்பிடித்திருக்கலாம்.

தங்களை ஆளும் தலைவர்களை தெய்வங்களாகப் பார்க்கிறவர்களுடைய வாழ்வு சிலைவழிபாடு நிறைந்ததாக இருக்கிறது. நெப்போலியன், அட்டாடெர்க், ஹிட்லர், நாசர் மற்றும் கோமெய்னி போன்றவர்களை பலர் தெய்வங்களைப் போல பார்த்தார்கள். ஆயினும் அவர்களுடைய மரணத்திற்கு பிறகு உடனடியாக அவர்களுடைய படங்களும், புத்தகங்களும், ஞாபகச் சின்னங்களும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. மனிதர்களால் கவரப்படுவதற்கும் அவர்களுடைய ஆதரவைச் சார்ந்திருப்பதற்கும் எதிராக எரேமியா எச்சரிக்கிறார். “மனுஷன் மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புய பெலமாக்கிக்கொண்டு, கர்த்தரைவிட்டு விலகுகிற இருதயமள்ள மனிதன் சபிக்கப்பட்டவன்” (எரேமியா 17:5).

மக்கள் விளையாட்டு வீரர்களையும் சினிமா நடிகர்களையும் கடவுள்களைப் போல வழிபடுகிறார்கள். அவர்கள் இசைக் கச்சேரிகளில் மதிமயங்கி இசையினால் வலிப்புக்குள்ளாகிறார்கள். இந்தக் காரியங்களைக் குறித்து நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். மக்களுக்குச் சேவை செய்வதோ, அவர்களை மதிப்பதோ தவறு என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் ஒரு மனிதனை இறைவனைவிட அதிகமாக நம்புவதும் நேசிப்பதும் ஆவிக்குரிய மீறுதலாகும். இறைவனோடு நாம் நித்திய உடன்படிக்கையில் இணைக்கப்பட்டிருக்கவில்லையா? “பொல்லாத விபச்சார சந்ததி” என்று இயேசு மக்களை அழைத்ததில் ஆச்சரியமில்லை. ஏனெனில் அவர்கள் இறைவனை முழு இருதயத்தோடும் நேசித்து, அவரைக் கனப்படுத்தி, அவரை மட்டுமே நம்புவதில்லை.

மக்கள் இறைவனை விட்டுப் பின்வாங்கிப் போவதால் ஏற்படும் வெற்றிடத்தின் காரணமாக இன்று சிலைவழிபாடு பல வடிவங்களில் காணப்படுகிறது. இறைவன் எரிச்சலுள்ளவர், அவரே நம்முடைய இருயத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறார். அவர் நம்முடைய அன்பின் ஒரு பகுதியினால் அல்லது ஒரு பகுதியான கீழ்ப்படிதலினால் திருப்தியடைவதில்லை. அவர் நித்தியமாக முழுமையாக நம்மை ஆட்கொள்ள விரும்புகிறார். ஆகவே பழைய மற்றும் நவீன சிலைகள் நம்முடைய வாழ்வைவிட்டு நீங்க வேண்டும். நம்முடைய பரலோக பிதாவிற்கு நம்முடைய அர்ப்பணிப்பை நாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். உங்கள் வாழ்வில் உள்ள இரகசிய சிலைகள் யாவை அதை என்றைக்குமாக அழிப்பதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள்.


4.03.4 - கிறிஸ்தவ விசுவாசம் முதல் கட்டளையை மீறுகிறதா?

இந்த இடம் வரை பத்துக்கட்டளைகளுக்கு கிறிஸ்தவர்கள் கொடுக்கும் விளக்கத்தை முஸ்லீம்களும் யூதர்களும் ஏற்றுக்கொள்வார்கள். ஆயினும் முதலாவது கட்டளையைக் கிறிஸ்தவர்கள் மீறுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். “கிறிஸ்தவர்களாகிய நீங்கள் நம்பிக்கை மறுப்பாளர்கள். ஏனெனில் நீங்கள் முதலாவதும் முக்கியமானதுமான கட்டளையை மீறுகிறீர்கள். நீங்கள் மூன்று கடவுள்கள் இருப்பதாகவும், அவர்களில் ஒருவர் சிலுவையில் மரணமடைந்தார் என்றும் கூறுவதால் இறை நிந்தனை செய்கிறீர்கள்” என்று அவர்கள் குற்றப்படுத்துகிறார்கள். பரிசுத்த திரித்துவத்தின் ஒருமையைக் கிறிஸ்தவர்கள் நம்புவதால் அவர்கள் இறைநிந்தனை செய்கிறவர்களாக முஸ்லீம்களும் யூதர்களும் கருதுகிறார்கள்.

இப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கு இயேசு எவ்வாறு பதிலுரைத்திருப்பார்? இயேசு கடின மனதுள்ளவர்களினால் இப்படிப்பட்ட தாக்குதல்களை அனுதினமும் அனுபவித்தார். தானும் பிதாவும் ஒருவராக இருப்பதை அவர் தெளிவாக எடுத்துரைத்தார்: “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்.” (யோவான் 10:30). “நானும் என் பிதாவும் இருவராக இருக்கிறோம்” என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை! ஆனால் “நானும் பிதாவும் ஒன்று” என்று குறிப்பிடுகிறார். அதன் பிறகு அவர் “நான் பிதாவிலும், அவர் என்னிலும் இருக்கிறோம்” என்று கூறினார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக தம்முடையவர்களுக்காக விண்ணப்பிக்கும்போது, “நாம் ஒன்றாக இருப்பதைப் போல அவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும்” என்று விண்ணப்பம் செய்தார் (யோவான் 17:22). இந்த வசனங்கள் திரித்துவக் கோட்பாட்டின்படி மூன்று தெய்வங்கள் அல்ல, ஒரே தெய்வமே இருக்கிறார் என்ற உண்மையைக் காண்பிக்கிறது. இங்குள்ள பன்மை ஒருமையாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. பிதாவும் இயேசுவும் பூரணமாக ஒன்றாயிருக்கிறார்கள் என்பதை இயேசு சாட்சியிடுகிறார். இந்த உண்மையை நாம் கணக்குப் பாடத்தின் முறைப்படி புரிந்துகொள்ள முடியாது. “பரிசுத்த ஆவியினாலே அன்றி ஒருவராலும் இயேசுவைக் கர்த்தர் என்று சொல்ல முடியாது” (1 கொரிந்தியர் 12:3). இது ஒரு நித்தியமான ஆனமீக உண்மையாக இருக்கிறது. நாம் இறைவனுடைய ஆவிக்கு நம்மைத் திறந்து கொடுக்காவிட்டால், ஆவிக்குரிய மெய்மைகளை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.

“ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்வான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடு வாசம்பண்ணுவோம்” (யோவான் 14:23) என்று இயேசு சொல்கிறார். இயேசுவின் சீடர்களுடைய வாழ்வில் பரிசுத்த ஆவியானவர் குடிகொள்வார் என்று இயேசு அவர்களுக்கு வாக்களித்தார். அதே வேளையில் தானும் பிதாவும் ஒன்றாயிருக்கிற காரணத்தினால், அவர்கள் இருவரும் சீடர்களுடைய இதயங்களில் வாசம்பண்ணுவர்கள் என்று கூறுகிறார்.

கிறிஸ்தவர்கள் மூன்று தனித் தனி தெய்வங்களை நம்புவதில்லை. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக தம்மை வெளிப்படுத்தியுள்ள ஒரே இறைவனையே அவர்கள் நம்புகிறார்கள். திரித்துவத்தின் ஒருமையை அறிக்கை செய்யும்போது நாங்கள் முதலாம் கற்பனையை மீறுவதில்லை, மாறாக அதை நிறைவேற்றுகிறோம். இயேசு கிறிஸ்துவின் மரணத்தில் நாம் இறைவனோடு ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறபடியால், இறைவனுடைய ஆவியானவர் நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறார். இறைவனை நாம் பிதா என்று அழைத்து, பிதாவிற்குரிய அவருடைய பெயரை நாம் பரிசுத்தம் செய்யும்படியாக உண்மையுள்ள ஆவியானவர் நம்மை உற்சாகப்படுத்துகிறார். “நமக்கு அருளப்பட்ட ஆவியினாலே இறைவனுடைய அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால்,” (ரோமர் 5:5) இயேசுவையும் அவ்விதமாகவே நம்பி, நம்முடைய முழு இருதயத்தோடும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறக்காமலும் இந்த மகிமையான சத்தியத்தை அறிந்துகொள்ள முயற்சிக்காமலும் இந்த பரிசுத்த திரித்துவத்தின் ஒருமை மறைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

கிறிஸ்தவர்கள் நம்பும் திரித்துவத்தை குர்ஆன் உண்மையில் தாக்கிப் பேசுவதில்லை. மாறாக, அது பிரிவனைவாத திரித்துவத்தையே கண்டிக்கிறது. அதை அனைத்துக் கிறிஸ்தவ திருச்சபைகளும் எதிர்த்துத் தாக்குகின்றன. தந்தை, தாய், மகன் ஆகிய திரித்துவத்தைத்தான் குர்ஆன் எதிர்த்துப் போரிடுகிறது (சுரா அல்-மாயிதா 5:116). மரியாளின் மகனாகிய இயேசுவே இறைவன் என்ற நம்பிக்கையை (சுரா அல்-மாயிதா 5:17,72) அல்லது அவர் மூன்று தெய்வங்களில் மூன்றாவது தெய்வம் என்ற நம்பிக்கையைத்தான் (சுரா அல்-மாயிதா 5:73) குர்ஆன் எதிர்க்கிறது. இறைவன் நித்திய காலமாக ஒருவராக இருக்கிறார் என்றும் பிதாவாகிய அவர் தம்முடைய வார்த்தையின் மூலமாகப் பேசுகிறார் என்றும் தம்முடைய ஆவியின் மூலமாகச் செயல்படுகிறார் என்றும் நம்புவதுதான் பரிசுத்த திரித்துவத்தைக் குறித்த மிகச்சரியான வேதாகமப் புரிந்துகொள்ளுதல் ஆகும். உயிரியல் ரீதியாக தந்தை, தாய், மகன் ஆகிய திரித்துவத்தை நாங்கள் புறக்கணிப்பதோடு, மரியாளின் மகனாகிய கிறிஸ்து தெய்வமாக இருக்கிறார் என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பிதாவாகிய இறைவனும், குமாரனாகிய இறைவனும், பரிசுத்த ஆவியாகிய இறைவனும் ஒரே இறைவனாக இருக்கிறார் என்பதுதான் எங்களுடைய விசுவாச அறிக்கையாகும்.


4.03.5 - திரித்துவத்தைக் குறித்து பழைய ஏற்பாடு என்ன போதிக்கிறது?

பரிசுத்த திரித்துவத்தின் ஒரே இறைவனைக் குறித்து முக்கியமான தகவல்களை பழைய ஏற்பாடு நமக்குக் கொடுக்கிறது. குர்ஆன் கூட இதை நிராகரிக்க முடியாது.

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே அவரைக் குறித்து இறைவனுடைய வெளிப்பாட்டில் இவ்வாறு வாசிக்கிறோம்: “நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்”… மேலும் மக்களுக்கு இவ்விதமான எச்சரிப்புக் கொடுக்கப்படுகிறது : “குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்” (சங்கீதம் 2:7,12).

கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 700 வருடங்களுக்கு முன்பாகவே ஏசாயா 7:14 இவ்வாறு கூறுகிறார்: “ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் (அதாவது இறைவன் நம்மோடு இருக்கிறார்) என்று பேரிடுவாள்”.

ஏசாயா 9:6 மாபெரும் வாக்குறுதியைக் கொண்டிருக்கிறது. “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேல் இருக்கும்; அவர் நாமம்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்”. இந்த வார்த்தைகள் இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்திற்கும் அவர் பிதாவோடு ஒன்றாக இருப்பவர் என்பதற்கும் சாட்சியாக இருக்கின்றன.

2 சாமுவேல் 7:12-14-ல் தாவீதுக்கு அவருடைய சந்ததியைக் குறித்த வாக்குறுதி கொடுக்கப்படுகிறது. அவர் தாவீதின் கர்ப்பப்பிறப்பாக இருக்கும் அதேவேளையில் இறைவனுடைய மைந்தனாகவும் இருப்பார் என்று கூறப்படுகிறது. அப்போதிலிருந்து மேசியா அல்லது தாவீதின் குமாரனுக்கு இன்னொரு பெயர் இறைமகன் என்று வழங்கப்பட்டு வருகிறது.

“கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களைப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும்” என்று சங்கீதம் 110:1-ல் வாசிக்கிறோம். இந்த வசனத்தில் இரண்டு ஆண்டவர்கள் இருக்கிறார்களா? ஒருபோதும் இல்லை. இந்த வசனம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகியோருக்கிடையிலுள்ள பரிபூரண ஐக்கியத்தை எடுத்துக்கூறுகிறது.

ஆரம்பத்திலிருந்தே இறைவனை தம்மைப் பற்றிப் பேசும்போது பன்மையில்தான் பேசியிருக்கிறார். “நமது சாயலின்படியும் நமது ரூபத்தின்படியும் மனுஷனை உண்டாக்குவோமாக” (ஆதியாகமம் 1:26).

பரிசுத்த திரித்துவத்தின் ஒருமையைக் குறித்த சாட்சி கிறிஸ்தவர்களுடைய கண்டுபிடிப்பல்ல என்பதையே இது காண்பிக்கிறது. அது கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே வெளிப்படுத்தப்பட்ட இறைவனுடைய சத்தியமாயிருக்கிறது. இறைவனுடைய இந்த வெளிப்பாட்டிற்கு எதிர்த்து நிற்கக்கூடியவன் யார்?


4.03.6 - கிறிஸ்துவின் தெய்வீகத்தைக் காண்பிக்கும் குர்ஆன் பகுதிகள்

ஐந்தாகமங்களும், சங்கீதங்களும், தீர்க்கதரிசிகளுடைய புத்தகங்களும் மட்டுமல்ல குர்ஆனுடைய பகுதிகளும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய ஒரே இறைவனைக் குறித்து சாட்சியிடுகின்றன. அந்த குர்ஆன் உடைய வசனங்கள் கிறிஸ்தவர்களுடைய சாட்சிகளுடன் இசைந்து போகின்றன. திறந்த மனதோடு குர்ஆனைப் படிக்கும் எந்த இஸ்லாமியரும் கன்னியாகிய மரியாளிடத்தில் இயேசு பிறந்தார் என்பதைக் குறித்துப் பேசும் குர்ஆனுடைய பகுதிகளை நன்கு புரிந்துகொள்வர். எந்தவித மனிதனுடைய இடையீடும் இன்றி அல்லாஹ்வின் வார்த்தையாக இயேசு பிறந்தார். அல்லாஹ் தம்முடைய ஆவியை கன்னி மரியாளின் மேல் ஊதியபோது இயேசு பிறந்தார் என்று குர்ஆன் போதிக்கிறது (சுராக்கள் அல்-அன்பியா 21:91 மற்றும் அல்-தஹ்ரீம் 66:12).

அல் இம்ரான் 3:45, அன்னிஸô 4:171 மற்றும் மர்யம் 19:43 ஆகிய சுராக்கள் இயேசு அல்லாஹ்வினுடைய மனுவுருவான வார்த்தை என்றும் அல்லாஹ்வினிடத்திலிருந்து வந்த ஆவி என்றும் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார். அவருடைய மகிமையைக் கண்டோம்” (யோவான் 1:14) என்று யோவான் கூறுவதையே இந்த குர்ஆனிய வசனங்கள் இஸ்லாமிய வார்த்தைகளில் எதிரொலிக்கின்றன.

களிமண்ணினால் ஒரு பறவை போன்ற உருவத்தைச் செய்து, அதன் மேல் ஊதுவதன் மூலமாக அதற்கு உயிர்கொடுக்கத் தக்கதாக பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவை பெலப்படுத்தினார் என்று அல்-பகரா 2:87, 253 மற்றும் அல்-மாயிதா 5:110 ஆகிய சுராக்களில் நாம் வாசிக்கிறோம். அவர் அல்லாஹ்வினுடைய அனுமதியின் பேரில் குருடர்களையும் குஸ்டரோகிகளையும் சுகமாக்கி, மரணமடைந்தவர்களை உயிரோடு எழுப்பினார். இவ்வாறு அல்லாஹ்வும் கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியானவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது குர்ஆனில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இப்படியிருக்க, ஏன் முஸ்லீம்கள் இறைவனுக்கும் அவருடைய மேசியாவிற்கும் எதிராகக் கலகம் செய்கிறார்கள்?

“மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடத்திலிருந்து ஓர் அருளாகவும் நாம் அவரை ஆக்குவதற்காகவுமே…” என்று மர்யம் 19:21-வது சுராவில் நாம் வாசிக்கிறோம். குர்ஆனில் அல்லாஹ் தம்மைப் பன்மையில் அழைப்பதும் கிறிஸ்து இரக்கமுள்ளவரிடத்தில் இருந்து வந்த இரக்கம் என்று அவரால் அழைக்கப்படுவதும் எப்போதும் ஆச்சரியமளிப்பதாகவே இருக்கிறது. அதாவது, அவர் தெய்வீக அடிப்படைத் தன்மையைக் கொண்டவராக இருக்கிறார் என்பதையே இது காண்பிக்கிறது.

பழைய ஏற்பாட்டிலும் குர்ஆனிலும் பல பகுதிகள் திரித்துவத்தின் ஒருமையைக் குறித்துச் சாட்சியிடுகின்றன. ஆகவே நாமும், தேவ தூதர்களோடு சேர்ந்து, “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர். பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது” (ஏசாயா 6:3) என்று அவரைப் புகழ்ந்துபாடும்படி தூண்டப்படுகிறோம். மூன்று முறை பரிசுத்தர் என்ற வார்த்தை திரும்பத் திரும்பக் கூறப்படுவது பிதாவும் பரிசுத்தர், குமாரனும் பரிசுத்தர், பரிசுத்த ஆவியும் பரிசுத்தர் என்பதையும் அவர்கள் பரிசுத்தத்தில் ஒன்றாயிருக்கிறார்கள் என்பதையுமே காண்பிக்கிறது.


4.03.7 - கிறிஸ்துவின் தெய்வீகத்தைக் குறித்த கிறிஸ்தவர்களின் நம்பிக்கை

அப்போஸ்தலர்கள் அனைவரும் ஒரேவிதமாக கிறிஸ்துவின் தெய்வீகத்தைக் குறித்து சாட்சியிடும்போது அவர்கள் எதையும் மிகைப்படுத்திக்கூறவில்லை. தான் கொல்லப்படக்கூடிய ஆபத்திருந்தபோதிலும் அப்போஸ்தலனாகிய பவுல் “அவர் அதரிசனமான இறைவனுடைய தற்சொரூபம்” என்று குறிப்பிடுகிறார் (கொலோசெயர் 1:15). “வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” என்று யோவான் அறிக்கை செய்கிறார். “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு சாட்சியிடுகிறார் (மாற்கு 16:16).

நிசேயா விசுவாசப்பிரமாணம் கிறிஸ்தவ நம்பிக்கையைச் சுருக்கமாக இவ்வாறு அறிக்கை செய்கிறது: “ஒரே கர்த்தராகிய இயேசுவையும் விசுவாசிக்கிறோம். அவர், இறைவனுடைய வார்த்தை, தெய்வத்தில் தெய்வமானவர், ஜோதியில் ஜோதியானவர், உயிரில் உயிரானவர், ஒரே பேறான குமாரன், படைப்புகளில் முதல் பேறானவர், சகல யுகங்களுக்கு முன்பே பிதாவாகிய இறைவனால் ஜெனிப்பிக்கப்பட்டவர், அவர் மூலமாக சகலமும் உண்டாயிற்று”.

யூதர்களும் முஸ்லீம்களும் தங்களுடைய இறுக்கமான கொள்கையினால் எல்லாம் வல்ல இறைவனுக்கு கட்டுப்பாடு போடுகிறார்கள். இறைவன் இருக்கிறபடி தம்மை வெளிப்படுத்துவதற்கு யாரால் தடைபோட முடியும்? வல்லமையுள்ள இறைவன் ஒரு குமாரனப் பெற்றிருக்கவோ அவரை இவ்வுலகத்தின் மீட்புக்காகப் பலியாகக் கொடுக்கவோ அவருக்கு உரிமையில்லையா? இறைவன் சுதந்திரமானவராக இருக்கிறார்! கிறிஸ்து உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே இருக்கிறார். அவர் இவ்வுலகத்தை இறைவனோடு ஒப்புரவாக்கவும் பரலோகத்தின் அமைதியை மீண்டும் கொண்டுவரவும் மனிதனானார். உலகத்தை மீட்பதற்காகவே அவர் மனிதனாக உருவெடுத்தார். அவர் உலகத்தின் பாவத்தை நீக்கும்படி இவ்வுலகத்தில் பாவமற்றவராக வாழ்ந்தார். இந்த தெய்வீக அழைப்பைத் திருமுழுக்கு யோவான் குறிப்பிடும்போது, “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29) என்று கூறினார். இதன் விளைவாக நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்ட காரணத்தினால், நாம் இறைவனுடைய பிள்ளைகளாகத் தத்தெடுக்கப்பட்டு, இறைவனைப் பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே என்று அழைக்கிறோம். கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மனிதர்களுக்கும் கிறிஸ்து மாபெரும் இரட்சிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இந்துக்களுக்குக்கும், பௌத்தர்களுக்கும், யூதர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் மட்டுமல்ல நாத்திகர்களுக்கும் அவர் மீட்பை வழங்குகிறார். அவரை முழுவதுமாக நம்பி, ஆண்டவராகவும் மீட்பராகவும் அவரை ஏற்றுக்கொள்கிற அனைவருக்கும் அவர் நீடுவாழ்வைக் கொடுக்கிறார். குமாரன் நம்மைப் பிதாவினிடத்தில் நடத்துகிறார். பிதா நம்மைக் குமாரனிடத்தில் இழுத்துக்கொள்கிறார். “இவர் என்னுடைய நேச குமாரன். இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்று பிதா தம்முடைய குமாரனை நமக்கு யோர்தான் நதிக்கரையில் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் (மத்தேயு 3:17). பரலோகத்திலிருந்து கேட்கும் சத்தத்தை யார் தடைசெய்ய முடியும்?


4.03.8 - முதலாவது கட்டளையின் நோக்கம் என்ன?

இறைவனை நேசிக்க வேண்டும் என்பதே முதலாவது கட்டளையின் நோக்கம் ஆகும். மிகவும் முக்கியமான கட்டளையில் மோசே இதைத்தான் தெளிவாக எழுதியிருக்கிறார்: “உன் தேவனாகிய கர்த்தரை உன் முழு இருயத்தோடும், முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் அன்புகூருவாயாக” (உபாகமம் 6:5). ஒன்று நாம் இறைவனை நேசித்து அவருடைய ஆவிக்கு உகந்த வாழ்க்கை வாழ்கிறோம், அல்லது இறைவனை வெறுத்து அவருடைய சித்தத்திற்கு எதிராகச் செய்கிறோம். நாம் இறைவனை நேசித்து, அவரைப் பற்றியே சிந்தித்து, அவருக்கு செவிகொடுத்து, அவருக்கு விருப்பமானதைச் செய்வோமானால், ஒரு மணவாட்டி தனது மணவாளனுக்காக ஏங்குவதைப் போலவும் அவனுக்காகவே வாழ்ந்து, அவனுடைய கடிதத்தைத் திரும்பத் திரும்ப வாசிப்பதைப் போல நாமும் இறைவனை நேசிக்கிறவர்களாயிருப்போம். தங்களுடைய பெருமையை முக்கியப்படுத்தி, தங்களையே தெய்வமாகக் கருதிக்கொண்டு, இறைவனுக்கு தங்கள் முதுகைக் காட்டுகிறவர்கள் அவருடைய வார்த்தையை வெளிப்படையாகவே மறந்து போகிறவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய இருதயக் கடினத்தினால் அவர்கள் இறைவனுடைய கோபத்திற்கு நிச்சயம் ஆளாவார்கள்.

ஆனால் கிறிஸ்துவை நேசிக்கிறவர்கள் அவருடைய ஆவிக்குத் தங்களைத் திறந்துகொடுக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய பாவங்கள் அனைத்திற்குமான பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொண்டு, பரிசுத்த ஆவியின் வல்லமையில் நடக்கிறார்கள். பிதாவினுடைய நாமம் அவர்களுடைய வாழ்விலும் வீட்டிலும் பரிசுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் அனுதினமும் விண்ணப்பிக்கிற காரணத்தினால் அவர்கள் தங்கள் பிதாவினுடைய சாயலுக்கு நிகராக மறுரூபப்படுகிறார்கள். நாம் அவரை நேசித்தால், அவரிடத்தில் சேர்ந்து கிருபையின் மேல் கிருபை பெற்றுக்கொள்வோம். அனுதினமும் நம்முடைய மனசாட்சி சுத்திகரிக்கப்படும் அனுபவத்தைப் பெற்று, இறைவனுடைய பிள்ளைகளுக்குரிய சுதந்திரத்துடன் வாழ்ந்து, அவருடைய ஆவிக்குரிய ஊழியத்தில் பயனடைவோம். அவரை உண்மையாக நேசிக்கிறவர்கள் தங்களுடைய வாழ்வில் இருக்கும் சிலைகளை அகற்றிவிட்டு, புதிய உடன்படிக்கையில் உறுதியாக நிலைத்திருக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கைக்கும் நம்பிக்கைக்குமான அந்த புதிய உடன்படிக்கையின் இரகசியம் “இறைவன் அன்பாகவே இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் இறைவனில் நிலைத்திருக்கிறான், இறைவனும் அவனில் நிலைத்திருக்கிறார்” என்பதே (1 யோவான் 4:16).

www.Grace-and-Truth.net

Page last modified on March 16, 2015, at 01:51 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)