Grace and Truth

This website is under construction !

Search in "Tamil":
Home -- Tamil -- 17-Understanding Islam -- 017 (AXIOM 4: Belief in the Prophets)
This page in: -- Arabic? -- Bengali -- Cebuano -- English -- French -- Hausa -- Hindi -- Igbo -- Indonesian -- Kiswahili -- Malayalam -- Russian -- Somali -- TAMIL -- Ukrainian -- Yoruba

Previous Chapter -- Next Chapter

17. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளுதல்
பகுதி இரண்டு:இஸ்லாத்தின் நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் புரிந்துகொள்ளுதல்
அத்தியாயம் 3: அடிப்படை நம்பிக்கைகள்

3.4. அடிப்படை நம்பிக்கை 4: தீர்க்கதரிசிகளில் நம்பிக்கை


இஸ்லாமியக் கருத்துப்படி, வரலாறு முழுவதும் 144,000 தீர்க்கதரிசிகள் மனிதகுலத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கூறுகிறது. ஆனால், குர்ஆன் 25 பேரின் பெயர்களை மட்டுமே தெரிவிக்கிறது. ஒவ்வொரு தூதரும் இறைவனிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றார், மேலும் ஒரு ஓட்டப்பந்தய ஓட்டக்காரரைப் போல, அவர்களுக்குப் பின்வரும் தூதரின் போதனைகளைப் பின்பற்றுமாறு மக்களை வற்புறுத்தினார். சில தூதர்கள் பைபிளில் குறிப்பிடப்படும் வரலாற்று நபர்கள், ஆனால் பெரும்பாலானவர்கள் பெயர் தெரியாதவர்கள். முகமது நபி இறுதித் தூதராகக் கருதப்படுகிறார், ஈசா அவருக்கு முந்தைய தூதராகக் கருதப்படுகிறார் (எனவே முகமது இஞ்ஜீலைப் பின்பற்றுமாறு அழைப்பு விடுத்தது இதனால்தான்). தீர்க்கதரிசிகள் அடிப்படையில் வழிகாட்டிகளாகச் செயல்பட்டு, மக்களை அல்லாவை வணங்குவதற்கு வழிநடத்தினார்கள்.

இந்த தீர்க்கதரிசிகளில், 315 பேர் தூதர்கள் என்று கருதப்படுகிறார்கள். முன்னர் குறிப்பிட்டது போல், தூதர்கள் என்பவர்கள் இறைவனால் தெய்வீக வேதங்கள் வழங்கப்பட்டதாக முஸ்லீம்கள் நம்பும் தீர்க்கதரிசிகள் ஆவார்கள். எனவே, எல்லா தூதர்களும் தீர்க்கதரிசிகளே ஆனால், எல்லா தீர்க்கதரிசிகளும் தூதர்கள் அல்ல. முகமது நபியின் கூற்றுப்படி, முஸ்லீம்கள் அனைத்து தீர்க்கதரிசிகளையும் மற்றும் தூதர்களையும் நம்புவதாகக் கூறுகின்றனர்.

முஸ்லீம்கள் அனைத்து தீர்க்கதரிசிகளும் தவறற்றவர்கள் என்று நம்புகின்றனர், அதாவது அவர்கள் தவறு செய்யவோ பாவம் செய்யவோ மாட்டார்கள் என்று பொருள். ஆனால், இந்த நம்பிக்கை முஸ்லீம்களுக்கு உடனடியாக சிக்கல்களை ஏற்படுத்துகிறது, ஏனென்றால் குர்ஆன் சில தீர்க்கதரிசிகளின் பாவங்கள் என்று தோன்றும் செயல்களை பதிவு செய்கிறது. உதாரணமாக, மோசே கோபத்தில் ஒருவரைக் கொன்றதாகவும், ஆபிரஹாம் பொய் சொன்னதாகவும், தாவீது ராஜா விபச்சாரம் செய்ததாகவும் குர்ஆன் கூறுகிறது. இது அவர்களின் தவறற்ற தன்மையுடன் இந்தப் பாவங்களை எப்படி இணைக்கிறது என்பது குர்ஆன் விளக்கம் அளிக்கவில்லை. மேலும், ஆதாம் மனித இனத்தின் பாவத்திற்கு காரணமாக இருந்தாலும், அவர் பாவம் செய்யாதவர் என்று கருதப்படுகிறார். இதே போல், முகமது நபிக்கு அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் அவர் தவறு செய்யாத தன்மை கொண்டவர் என்றால், பாவங்களே இல்லாதவருக்கு மன்னிக்க வேண்டிய அவசியம் என்ன?

குர்ஆனும் ஹதீஸும் குறிப்பிடும் தீர்க்கதரிசிகள் பற்றிய தெளிவான மற்றும் முழுமையான தகவலை வழங்கவில்லை என்பது இந்த குழப்பத்திற்கான ஒரு காரணம். சில சமயங்களில் இந்த செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்படுவது போலிருக்கும். இஸ்லாமிய கருத்துக்கள் நிச்சயமாக வரலாற்று ஆவணங்களிலோ அல்லது பைபிளிலோ காணப்படுவதை விட வேறுபட்டவை. உதாரணமாக, மோசே பற்றி குர்ஆன் கூறுகிறது:

“ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும்; "நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக (ஃகிப்லாவாக) ஆக்கிக் அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் - மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!" என்று வஹீ அறிவித்தோம்.” (குர்ஆன் 10:87)

பிற இடங்களில்:

“ஆகவே (ஃபிர்அவ்ன்) அந்நாட்டை விட்டு (மூஸாவையும் பனீ இஸ்ராயீல்களையும்) விரட்டிவிட நாடினான்; ஆனால், நாம் அவனையும் அவனுடனிருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம். இதன் பின்னர் நாம் பனூ இஸ்ராயீல்களுக்குச் சொன்னோம், நீங்கள் அந்த நாட்டில் குடியிருங்கள்; மறுமையின் வாக்குறுதி வந்தால், நாம் (உங்களையும், ஃபிர்அவ்னின் கூட்டத்தையும் விசாரணைக்காக) நம்மிடம் ஒன்று சேர்ப்போம்.” (குர்ஆன் 17:103-104)

குர்ஆன் மோசே இஸ்ரவேலரை எகிப்தில் குடியேற அழைத்ததாகவும், பார்வோன் அவர்களை வெளியேற்றுவதற்கு முயன்றதாகவும், அவர் மூழ்கடிக்கப்பட்ட பிறகு, இஸ்ரவேலர் எகிப்தில் குடியேறினர் என்றும் கூறுகிறது. நிச்சயமாக இது உண்மையான சம்பவத்திற்கு முற்றிலும் மாறானது, எந்த யூத வரலாற்று ஆசிரியரும் இதைப் பதிவு செய்யவில்லை, எந்த யூதரும் இதை நம்பவில்லை. மோசே இஸ்ரவேலை எகிப்து தேசத்திலிருந்து வெளியே அழைத்து வரவே வந்தார், அவர்களை அங்கு குடியேற்ற வேண்டியதில்லை. மேலும், பார்வோன் இஸ்ரவேலரை அடிமைப்படுத்த விரும்பினானே அன்றி, அவர்களை எகிப்திலிருந்து வெளியேற்ற விரும்பவில்லை.

“உலு அல்-அஜம்” (உறுதியான மனம் கொண்டவர்கள்) என்று அழைக்கப்படும் ஐந்து தீர்க்கதரிசிகள் இருப்பதாக முஸ்லீம்கள் நம்புகின்றனர்:

“(நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்.” (குர்ஆன் 33:7)

அனைத்து தீர்க்கதரிசிகளையும் நம்பி அவர்களை மதிக்க வேண்டும் என்று முஸ்லீம்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது, ஆனால் சில ஹதீஸ்கள் வேறு கருத்தை முன்வைக்கின்றன. குர்ஆன் சொல்லுகிறது:

“(இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். "நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள்.” (குர்ஆன் 2:285)

என்றாலும், பெரும்பாலும் முஹம்மதை உயர்வாகக் காட்டுவதற்காக - பல ஹதீஸ்கள் உண்மையில் தூதர்கள் இடையே வேறுபாடுகளைக் காட்டுகின்றன - இது குர்ஆனுடன் முரண்படுவது போல் தோன்றுகிறது. உதாரணமாக, முகமது நபி தன்னைப் பற்றி இவ்வாறு கூறியதாகக் கூறப்படுகிறது:

“நானும் என்னைத் தொடர்ந்து வந்த தீர்க்கதரிசிகளும் ஒரு மனிதனைப் போன்றவர்கள். அவர் ஒரு கட்டிடத்தை அதை அழகாகவும், சிறப்பாகவும் கட்டினார், ஆனால் ஒரு மூலையில் ஒரு கடைக்கல் மட்டும் இடப்படாமல் காலியாக இருந்தது. மக்கள் அதைச் சுற்றி நடந்து, பாராட்டி, ‘இந்த கடைக்கல் ஏன் இல்லை?’ என்று கேட்கத் தொடங்கினர். நான்தான் அந்தக் கடைக்கல், நான் தீர்க்கதரிசிகளின் முத்திரை.” (ஸஹீஹ் முஸ்லீம்).

இதே கருத்தை மற்றொரு உதாரணம், ஸஹீஹ் முஸ்லீம் தொகுப்பும் கூறுகிறது:

"நான் தான் மறுமை நாளில் மனித இனத்தின் தலைவராக இருப்பேன், எனது கல்லறையே முதலில் திறக்கப்படும், நான் அல்லாஹ்விடம் முதலில் மனிதர்களுக்காக பரிந்து பேசுபவனாக இருப்பேன், எனது பரிந்து பேசுதல் ஏற்றுக்கொள்ளப்படும்." (ஸஹீஹ் முஸ்லீம்).

பல்வேறு ஏழை நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூகங்களால் கடைப்பிடிக்கப்படும் நாட்டுப்புற இஸ்லாமிய நம்பிக்கைகள், முகமதுவுக்கு மற்ற எவருக்கும் இல்லாத சிறப்புப் பெயர்களையும் பட்டங்களையும் கொடுத்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, முகமது அடக்கம் செய்யப்பட்ட பள்ளியின் சுவரில் 200க்கும் மேற்பட்ட பெயர்கள் எழுதப்பட்டுள்ளன, இதில் பரிசுத்த ஆவி, சொர்க்கத்தின் சாவி, விசுவாசத்தின் அடையாளம், பாவத்தை மன்னிப்பவர், கருணையாளர் மற்றும் ஆதாம் மகன்களின் தலைவர் ஆகியவை அடங்கும். இந்த பெயர்களில் எதுவும் குர்ஆனிலோ அல்லது ஹதீஸிலோ அவருக்குக் கூறப்படவில்லை. சில சூஃபி முஸ்லீம்கள் அவரை முதல் படைப்பு, அல்லாவின் அரியணையின் ஒளி, சமாதானம் செய்பவர், யுகங்களின் ஒளி மற்றும் அல்லாவின் அறிவின் காவலர் என்று அழைக்கும் அளவுக்கு செல்வார்கள். முகமதுவுக்குக் கற்பிக்கப்பட்ட பல அற்புதங்களின் கதைகள் அவரது மரணத்திற்குப் பின்னரே தோன்றின, இருப்பினும் ஹதீஸ் தொகுப்புகளிலோ அல்லது எந்த வரலாற்று புத்தகங்களிலோ பதிவு செய்யப்படவில்லை, எனவே அவை பெரும்பாலும் பின்னர் உருவாக்கப்பட்டவை ஆகும். இவற்றில் பெரும்பாலானவை முகமதுக்கு முந்தைய தீர்க்கதரிசிகள் செய்ததாக கூறப்படும் அற்புதங்களைப் போன்றவைதான். இருப்பினும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், முகமதுவின் அற்புத சக்திகள் அவரது முன்னோடிகளை விஞ்சி இருக்கும். உதாரணமாக, குர்ஆன் சாலொமோன் விலங்குகளிடம் பேசக்கூடியவராக இருந்தார் என்று கூறுகிறது. ஆனால், முகமது இறந்த சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பரவி வரும் கதைகளில், முகமது விலங்குகளிடம் பேசுவது மட்டுமல்லாமல், சில விலங்குகள் அவரிடத்தில் விசுவாசம் வைத்து ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல், இயேசு “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும்” என்றார் (லூக்கா 19:40). முகமது “நான் நபியாக வருவதற்கு முன்பு என்னை மரியாதையுடன் பார்த்து வந்த மெக்காவிலுள்ள கல்லை நான் அடையாளம் காண்கிறேன், இப்போதும் அதை நான் அடையாளம் காண்கிறேன்” என்று கூறினார். (சாஹிஹ் முஸ்லீம்)

www.Grace-and-Truth.net

Page last modified on April 13, 2026, at 01:38 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)